Friday, June 26, 2009

‌நாடோடிகள் விமர்சனம்

உதயம் தியேட்டருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் இன்று போனேன். நாடோடிகள் படம். இடைவேளையில் பாப்கார்ன் கொறிக்க வந்தால் அங்கே சசிகுமார் நிற்கிறார். ''சசி, பிச்சுப்புட்டியேப்பா... தமிழ் சினிமான்னாலே காறித்துப்பணும்ங்கிறது மாதிரியான நிலைமையை உன்னை மாதிரி ஆளுகதான் மாத்திட்டிருக்கிய" என்றேன். பணிவோடு புன்னகைத்தார். அப்புறம் அவரை ரசிகர் குழாம் சூழ்ந்துகொண்டது.

அநேகமாக படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் முதல் காட்சிக்கு அங்கே ஆஜர் ஆகியிருந்தார்கள். "இந்தத் தியேட்டர்தான் மக்களோட பல்ஸ் பாக்குற எடம்" என்றார் நண்பர்.

சசிகுமாரை மட்டுமில்லாமல் அங்கே வந்திருந்த நடிக நடிகையர் அனைவருக்குமே ரசிகர்கள் ஆரவாரத்தோடு முகமன் கூறினார்கள். நா.முத்துக்குமாரிடம், "பிரமாதம் போ" என்று சொல்லிவிட்டு தம்மைப் பற்றவைத்தேன்.


"அது சரீ, விமர்சனம்?" என்கிறீர்களா?


படத்தைப் போய்ப் பாருங்க சாமிகளா...

Saturday, June 20, 2009

ஒருவன் நனையவில்லை

ஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார்.

இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள்.

''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.

சீடர்கள் தலை குனிந்தார்கள்.

Monday, June 15, 2009

நேற்றைய விபத்து

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் சிக்னலில் வலப்புறம் திரும்ப வேண்டும். சிக்னலில் சிவப்பு. டூ வீலரை நிறுத்தினேன். எனக்கு முன்னால் ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பின்னால் இருந்த காரின் டிரைவர் ஹார்ன் அடித்தபடி இருந்தார். என் வண்டியை சற்று முன்னகர்த்தினேன். விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார் மேற்படி டிரைவர். இருந்த சில அங்குல இடத்துக்கு நகர்ந்தேன். ஆனாலும், சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே காரை நகர்த்தி வந்து என் பைக்கை இடித்தான் அந்த டிரைவன். இடக்காலை பலத்த யத்தனத்தோடு உறுதியாக ஊன்ற முயன்று ... முடியாமல் விழுந்துவிட்டேன். இப்போது சிக்னலில் பச்சை. விழுந்த வண்டியைத் தூக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ முக்கிப்பார்த்தும்... ம்ஹூம்! அப்போது, நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து நின்றது. அடர்த்தியான டிராபிக்கில். என் வண்டியைக் கடந்து போகமுடியாமல் என்னை இடித்த காரும், மற்ற வாகனங்களும் நின்று ஹாரன்களைக் கதறடித்துக்கொண்டிருந்தன. பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.
ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் பிறருக்கு உதவும் பரோபகார குணத்தோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, வண்டியைத் தூக்க எனக்கு உதவி நான் ஓரமாகப் போய்விட்டால் நீங்கள் போக வழி கிடைக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

Tuesday, June 9, 2009

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா

"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "

போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...

******

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா,

பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...

சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.


அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.

சளி பிடித்தது என்று சொன்ன‌தற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.

45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாட‌ல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.

அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த‌ அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.

மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!

ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று. எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்ம‌ம்மா..

அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...

ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிட‌லாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்... அதுவும் ஒரு புண்நாள்.

உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.


உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...

ஆக..

என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.


மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...

இப்படிக்கு,

போதையாய்,
ம‌ப்பில்
'கப்பு'டன்
உளறலுக்கு
குவார்ட்டர் கோயிந்த‌ன்

Tuesday, June 2, 2009

என் கைபேசிக்கும் எனக்கும் சண்டை

இல்ல சார்,
பேண்டுக்கிட்டிருக்கேன்
கழுவுனதும் வந்துர்றேன்
என்பதாக முடிந்த
உரையாடலில் பங்கு பெற்ற எனக்கு
தொலைபேசி நாகரிகம் தெரியும்

ஒருமுறை வெளியூர் ஓட்டல் ஒன்றில்
புணர்ந்துகொண்டிருந்தபோது
வந்த
அழைப்பையும் எடுத்துப் பேசினேன்

வெறியேறிய தருணங்களில்
நான்
தூக்கியெறிவது
என் கைபேசியாகவே இருக்கிறது

என் எண் திரையில் ஒளிர்ந்தால்
தவிர்க்கும் பெண்களென‌
மூவர் உண்டு
அவர்களில் யாரும் உறவினர் இல்லை

அகாலத்தில்
மயங்கிக் கிடக்கையில்
அழைத்து
இலக்கண சந்தேகம் கேட்டு
எங்காவது இலக்கில்லாமல் பிக்னிக் போவோமா
என்கிறான்
நண்பனென்கிற பரம வைரி

கடும்கோபத்தில்
நண்பனைப் பழிவாங்க‌
குரலெடுத்துப் பாடுகிறேன் நிசியில்

வீடு காலிசெய்யச் சொல்லிவிட்டார்கள்

சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா
ப்ளீஸ்...