Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Thursday, July 9, 2009

கம்பன்

"ஒருத்தி இருக்கிறாள். ஒன்றுமில்லாமல் காலியாக இருக்கும் என் மனத்துக்குள் தன்னை அவள் இருத்திக்கொண்டாள். அவள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள். அறுபத்து நான்கு கலைகளையும் கருத்தில் வைத்திருப்பாள். நம் ஐம்புலன்களில் ஏதொன்றும் கலங்காமல் கருத்துகளைத் திருத்துபவள் அவள்தான். நான்கு திசையையும் பார்க்க நான்கு தலைகள் கொண்ட பிரமனின் தேவியான அவளை நான் ஒருபோதும் மறவேன்."


இது கம்பர் பாட்டு.
பாட்டைப் பாருங்கள் மேற்சொன்ன விளக்கத்தின் மொழிக்கு மிக நெருக்கத்தில் இருக்கும்.

பாட்டு:

ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே.

வார்த்தைக் கோவைக்காக இதை இங்கே குறிப்பிடுகிறேன். மற்றபடி, ராமாயணத்தைத் தவிர, கம்பன் எழுதிய பிற நூல்கள் தென்படுவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. மேற்சொன்ன பாடல் சரஸ்வதி அந்தாதியில் வருகிறது. ‌

இந்த நூலின் பாயிரமாக இரண்டு பாடல்கள் உண்டு. ரசனைக்குரிய அந்தப் பாடல்கள் யாருக்காவது நினைவிருந்தால் சொல்லுங்களேன்.

Monday, December 15, 2008

பின்லாந்தின் தேசிய காவியம்: கலேவலா




''நான் வடக்குப் பகுதிக்குப் போருக்குப் போகிறேன்..." ‍லெம்மின் கைனன் புறப்பட்டுவிட்டான்.

"போதுமான அளவு மந்திர சக்தி உனக்கு இல்லை. போகாதே மகனே! நீ இப்போது போனால் வடநாட்டுக்காரர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். உன் முகத்தைக் கரியிலும் தலையைச் சேற்றிலும் அமுக்குவார்கள். உன்னைச் சூடான சாம்பலிலே புதைத்துவிடுவார்கள். அதனால் போகாதே மகனே..." என்று அம்மா தடுத்தாள்.

லெம்மிகைனன் கேட்கவில்லை. "அம்மா, இதோ பார், இந்த சீப்பை வைத்துக்கொள். இதிலிருந்து ரத்தம் வழிந்தால் எனக்கு ஏதோ அபாயம் நேர்ந்திருக்கிறது என்று புரிந்துகொள்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

போனவன் நேராக வடநாட்டுத் தலைவி லொவ்ஹியைப் பார்த்து "உன் மகளை எனக்கு மணமுடித்துத் தா..." என்று கேட்டான்.

"சாதாரண மனிதனுக்கு என் பெண்ணைத் தரமாட்டேன். நீ பனிக்கட்டிகளில் சறுக்கிப் போ, பேய் வயலைத் தாண்ட வேண்டும். அங்கேயிருக்கும் பிசாசின் காட்டெருதைப் பிடித்து வந்தால் என் பெண் உனக்கே..." என்று சொல்லிவிட்டாள்.

வனதேவதைகளை வணங்கி, பிசாசின் கட்டெருதைப் பிடித்து வந்துவிடுகிறான் லெம்மின்கைனன்.

ஆனால், மறுபடியும் இரண்டு நிபந்தனைகளை விதிக்கிறாள் தலைவி. "தீக்குதிரையைப் பிடித்துவர மேண்டும். மரண ஆற்றில் இருக்கும் ஓர் அன்னத்தைக் கொல்ல வேண்டும்..."

தீக்குதிரையைப் பிடிப்பதில் சிரமம் எதுவும் இல்லை. தன் உடலின் எல்லா உறுப்புகளிலிருந்தும் தீயை வெளிவிடும் அந்தப் பேய்க்குதிரையைப் பார்த்த உடனேயே, கடவுளை வேண்டி, பனிமழை பெய்ய வைக்கிறான். சூடு தணிந்த குதிரையிடம் நல்ல வார்த்தைகள் பேசி, கெஞ்சிக் கூத்தாடி அதை வடநாட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறான்.

ஆனால், மரண ஆற்றில் இருக்கும் அன்னத்தைக் கொல்லப்போகும்போதுதான் மாட்டிக்கொள்கிறான். 'நனைந்த தொப்பியன்' என்கிற இடையன் ஒரு நீர்ப்பாம்பை எடுத்து லெம்மிகைனனின் ஈரலையும் இதயத்தையும் துளைக்குமாறு குத்திவிட்டான். சாகும் வேளையில் , தன்னைப் 'போகாதே' என்று சொன்ன அம்மாவை நினைத்துக்கொண்டான் லெம்மின் கைனன். மரணக் கடவுளின் மகன் இவனுடைய உடலைப் பல துண்டுகளாக வெட்டி, கறுப்பு நீர் ஓடும் மரண ஆற்றுக்குள் வீசினான்.

மகன் கொடுத்துவிட்டுப் போன சீப்பில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்ட அம்மா பதறிப்போய் வடநாட்டுக்கு விரைகிறாள்.

மரண ஆற்றில் மூழ்கிக் கிடக்கும் மகனின் உடல் துண்டுகளை, ஒரு நீண்ட குப்பைவாரியின் உதவியுடன் சேகரிக்கிறாள். சுவர்க்கத்திலிருந்து ஒரு தேனீ கொண்டுவந்து தந்த சிரஞ்சீவித் தேனைப் பயன்படுத்தி மகனுக்கு மீண்டும் உயிர்கொடுத்து வீட்டுக்கு அழைத்துப் போகிறாள்.

து பின்லாந்து நாட்டின் தேசிய காவியமான 'கலேவலா'வின் சுருக். பின்லாந்து நாட்டின் எந்த இலக்கியமும் இதுவரை தமிழில் கிடைத்ததில்லை. மொத்தமாக 88 தமிழர்களே வசிக்கும் ஒரு நாட்டிலிருந்து இவ்வளவு தடிமனான ஒரு தமிழ்ப் புத்தகம் வந்திருப்பது இனிய ஆச்சர்யம்!

இந்தியப் புராண இயல் போலவே மந்திரம், மாயம், பாதாளம், சொர்க்கம், போர், காதல், பிள்ளைப் பாசம் என்று விரியும் இந்த பின்லாந்துக் காவியத்தைப் படிப்பதில் நமக்கு எந்த சிரமமும் இல்லை. வனாமொயினன், யொவுகாஹைனன், அந்தரோவிபுனன், குல்லர்வோ, கலர்வோ என்று கதாபாத்திரங்களுக்கு வித்தியாசமான பெயர்கள்.

இது உரைநடையில் எழுதப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக ரசித்திருக்க முடியும். மரபுக் கவிதையாக எழுதவேண்டும் என்று நிர்ணயித்துக்கொண்டதால், 'சொன்னான்' என்று முடிக்க வேண்டியதை, 'உரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம் உரைத்தே அவந்தான் உரைசெயலாயினன்...' என்று எழுதியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவலிங்கம்.‌‌