வந்து உட்கார்ந்து கால் மணி நேரம் ஆகியும் ஜெர்ரி எட்சனுக்குப் படபடப்பு அடங்கவில்லை. நெஞ்சுக்குள்ளே ஓடும் ரயிலின் தடக் தடக் குறையவில்லை. 'எழுந்து போய்விடலாமா' என்றுகூட நினைத்தான். அப்பாவின் கேலியான சவாலும், அம்மாவின் பாசமான கண்டிப்பும் நினைவுக்கு வந்தன.
"ஏண்டா உனக்கு இருபத்திரெண்டு வயசு ஆச்சு, ஞாபகமிருக்கா இல்லையா? ஆபீஸ்ல இருந்து வர்றே. புஸ்தகமும் கையுமா ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடறே. இல்லைன்னா கம்ப்யூட்டர், இன்டர்நெட். இதுவரைக்கும் ஒரு பொண்ணு கூடவாவது அவுட்டிங் கிவுட்டிங்னு எங்கேயாவது போயிருக்கியா?" அம்மாவின் குரல் ரொம்பவே தழுதழுத்துவிட்டது.
அப்பா ஒருபடி மேலே போய், "கொஞ்சம்கூட சோஷல் மூவ்மென்ட்டே இல்லாம எப்படித்தான் படிப்பும் முடிச்சுட்டு வேலையும் வாங்கினானோ..." என்று கேட்டேவிட்டார். விட்டால் இவனை டிஸ்மிஸ் செய்யச்சொல்லி ஆபீஸுக்கே லெட்டர் போட்டுவிடுவார் போலிருக்கிறது.
இவனுக்கு மட்டும் பிறரைப் போல் நார்மலாக இருக்க ஆசையில்லையா என்ன? சுபாவம் என்று ஒன்று இருக்கிறதே... அழகு குறைந்த பெண் என்றால் அலட்சியம் வந்துவிடுகிறது. ரொம்ப அழகான் பெண்ணைப் பார்த்தாலோ காதலுக்கு பதில் பயம்தான் வருகிறது. காம்ப்ளெக்ஸ்! இது அப்பா, அம்மாவுக்குப் புரிந்தால்தானே...
"நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க?"
"உன்னைச் சுத்தி நடக்கற விஷயங்களைப் பாரு. உன் வயசுப் பசங்களும் பொண்ணுங்களும் ரெஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்குன்னே காதலை உபயோகிக்கறது தெரியும். லவ், டேட்டிங் எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்ங்கிறது புரியும்" என்றபடி அப்பாவைப் பார்த்துக் கண்ணடித்தாள் அம்மா.
இவன் வெட்கப்பட்டு முடிப்பதற்குள், "லவர்ஸ் ஸ்கொயருக்குப் போ. எத்தனை விதமான ஜோடிகள் வர்றாங்க, லவ்லயே எத்தனை வகை இருக்குன்னு எல்லாம் தெரிஞ்சுப்பே. உனக்கே புத்தி வர சான்ஸ் இருக்கு. போ... போயிட்டு ராத்திரி வந்து என்கிட்டே சொல்லு. இந்தா" என்று கார் சாவியைக் கையில் திணித்தார் அப்பா.
இதோ வந்தாச்சு. பார்த்தாச்சு, இந்தக் கண்கொள்ளாக் கண்காட்சியை. 'ஊரின் இளைஞர் ஜனத்தொகை இத்தனையா!' என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
காதல் சதுக்கத்தில் எல்லா பெஞ்சுகளும் இரண்டு பேர் மாத்திரமே உட்காரும்படி டிசைன் செய்யப்பட்டிருந்ததை கவனித்தான். ஒவ்வொரு பெஞ்சிலும் ஒரு ஜோடி. உயரமான ஆள், குட்டைப் பெண்... பருமனான அம்மணி, ஒட்டடைக் குச்சி ஜென்டில்மேன். நடுத்தர வயது ஆபீஸர் தோற்றத்தில் ஒருவன், கூடவே கான்வென்ட் பெண் போன்ற ஆன்ட்டி... வெவ்வேறு தரங்களில், வெவ்வேறு நிறங்களில் மனிதர்கள். காதலர்கள். ஒரே ஒற்றுமை எல்லோருடைய முகங்களிலும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம்!
சிரித்தபடி, சீரியஸாக, சத்தம் போட்டபடி, முத்தம் கொடுத்தபடி, தோளில் கை போட்டு அணைத்துக்கொண்டு, மடி மீது தலைவைத்து, மார்பில் அடைக்கலம் தேடி... உக்கிரமாகக் காத்லிக்கும் ஜோடிகள்.
தனியாகவும் ஓரிருவர் உட்கார்ந்திருந்தார்கள். 'காத்திருந்தார்கள்' என்று சொல்வதுதான் பொருத்தம். ஒன்று, காதலி வருவாள்... அல்லது இதுவரை எங்கேஜ் ஆகாதவன் என்றால் புதிய நட்பு கிடைக்கும் மனித உயிர்களிடையே புதிய உறவுகளை உருவாக்குவதற்கும். ஏற்கெனவே இருக்கும் உறவுகளைச் செழுமைப்படுத்துவதற்கும் வீனஸ் தேவதையின் நிதி உதவியோடு கட்டப்பட்டிருக்கும் ஏரியா காதல் சதுக்கம்...
'தான் எதற்கு இங்கே வழி தப்பிய ஆடாக... திருவிழாவில் தொலைந்த குழந்தையாக...' என்று ஓரளவு படபடப்பு அடங்கி, யோசித்துக்கொண்டிருந்தபோது, நம்ப முடியாத அந்தக் காட்சியைப் பார்த்தான்.
ஐம்பதடி தூரத்தில் இரண்டு யுவதிகள் இவனைக் காட்டி என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, 'மாட்டேன். என்னை விட்டுவிடு' என்பதற்கான உடலசைவை வெளிப்படுத்தினாள். வயதில் மூத்தவளாகத் தெரிந்த மற்றவள், ஏதோ சொல்லி தைரியப்படுத்துவதும் புரிந்தது.
இவனுக்கு மறுபடி நெஞ்சு தடதடக்க ஆரம்பித்தது. 'நம்மைக் காட்டிக் காட்டி என்ன பேச்சு? ஒருவேளை அந்தச் சின்னவள் என்னால் கவரப்பட்டு... சே... நான் என்ன முதல் பார்வையிலேயே கவருமளவு கம்பீரமாகவா இருக்கிறேன்...'
இதற்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்கள் போல் இரு யுவதிகளும் ஜெர்ரியை நெருங்கினார்கள். 'என்ன அந்தஸ்தான தோற்றம்... கடவுளே என் வாழ்க்கையில் ஏதாவது அற்புதம் நடக்கப் போகிறதா?' அவசர அவசரமாகக் கைக்குட்டையை எடுத்து நெற்றியின் வியர்வைப் புள்ளிகளை அழுந்தத் துடைத்ததில் எரிந்தது நெற்றி. நெஞ்சுக்குள் ரயிலின் தடக்... தடக்... ஸ்டார்ட் ஆனது.
பக்கம் வந்தவர்களில் கூச்ச சுபாவியாகத் தெரிந்த அழகிய பெண் (அட, அதற்குள் 'அழகிய' என்ற அடைமொழி தோன்றிவிட்டதே!) பேச ஆரம்பித்தாள். "வந்து... நீங்க... இந்த காதல் சதுக்கத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?" அவள் குரல் கேட்டதும் பக்கத்து குரோட்டன்ஸில் இருந்து பட்டாம்பூச்சிகள் கிளம்பிப் பறந்தன. அவள் நெற்றியிலும் வியர்வை முத்துகளைப் பார்த்து இவனுக்குக் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
அதே நேரம், அவள் கேட்ட கேள்வியினால் அவனுடைய நெஞ்சு ரயில் வேகம் பிடிக்கவும் ஆரம்பித்தது. சொஞ்சம் சுதாரித்துக்கொண்டவள் போல அவள் தொடர்ந்து பேசினாள்.
"காதலைப் பற்றி என்ன நினைக்கறீங்க?" நல்லது. இது நல்லூழ்தான். இவன் இந்த இடத்துக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவனுடைய அதிர்ஷ்ட தேவதை காத்திருந்திருக்கிறாள்!
"காதலை ப்ரபோஸ் பண்ண வேண்டியது ஆணா, பெண்ணா?" அடடே என்ன வாசனை, என்ன வாசனை! பெண்களின் உடலில் இயற்கையிலேயே இவ்வளவு வாசனை இருக்குமா என்ன?
அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் தான் என்ன பதில் உளறினோம் என்று ஜெர்ரிக்குப் பதிவாகவில்லை. விதவிதமான ஸ்ருதிய்ல் ஏதேதோ ஒலிகளை எழுப்பிய உணர்வுதான் இருந்தது. 'கடவுளே இந்து இந்த இடத்தின் மகினையா, பெற்றோரின் ஆசீர்வாதத்தின் பலனா, அல்லது முற்பிறவியில்...'
கடைசியாக அந்தக் கேள்வியையும் அவள் கேட்டேவிட்டாள்!
"இப்போ என்னை மாதிரி ஒரு பொண்ணு உங்க கிட்டே ஐ லவ் யூ சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க..?"
இவன் தாங்க முடியாதவனாக அவளுடைய கையைப் பற்றிக்கொண்டுவிட்டான். 'ஓ என் கடவுளே ஓ என் கடவுளே' என்கிற வார்த்தைகள் மட்டும்தான் மனதில் வந்தன.
அதுவரையில்...
நண்பர்களே எனக்கு இந்தக் கதையை முடிக்கத் தெரியவில்லை. நீங்கள் முடித்தால் சந்தோஷப்படுவேன்.
மிகவும் எதிர்பார்க்கிறேன். ப்ல்ஸ்!!!