Tuesday, January 20, 2009

மாதவி மழை

பதினாறு முழத்துக்குள் வைத்தி ருக்கும்
பருவத்தைப் புதிர்களினை விடுவிக் காமல்
பதினாறு வருடங்க ளாய்ச்ச மைத்த‌
பக்குவத்தை, பதாம்புயத்தை, தந்தால் அந்த
அதிசயத்தோல் அரங்கத்தில் நீயும் நானும்
ஆடிடலாம் சதுரங்கம் ஐம்பு லத்தால்!
நதிநீச்சல் எதிர்நீச்சல் ஒத்துக் கொண்ட‌
நம்நீச்சல் பொதுநீச்சல், நிததீச் சல்தான்!

நாட்டியமா டும்பறவை நீ!பா வாடை
நட்சத்ரம்! அவையோரின் ஆசைப் பார்வை
ஈட்டிகள் எ லாம்மோதும் கேட யம்நீ!
ஈகையினால் விழிசிவக்கும் தோகை! பூவைத்
தோட்டத்தி லும்மஞ்சம் விரித்த காம‌
கோட்டத்தி லும் அவிழ்க்கும் பட்டுக் கோட்டை.
ஓட்டப்பந் தயம்நடக்கும் உன்னை நோக்கி.
ஒட்டப்பந் தயம் நடக்கும் உன்னி டத்தில்!

தத்தித்தா தாதைத்தா என்று ஆடும்
தாமரைத்தே ரே!குறுக்கே சிறிது கூட‌
ஒத்திவைப்புப் பிரச்சினைக்கே இடந்த ராமல்
ஒத்தித்தா முத்துத்தா! இயற்கை தீட்டும்
சித்திரமே வாஅருகில்! மெல்ப டிந்த
சேலயெனும் தூசைச்சற் றேது டைப்பேன்!
ஒத்திகையில் லாமல்வந் தெவரும் தம்மெய்
ஒத்திகைபி டித்திடஒத் துழைக்கும் மாதே!

பலகறைகள் இருந்தாலும் நிலவே உன்னைப்
பாடாத புலவனிந்த உலகில் உண்டோ?
நிலவைப்போல் நீபொதுதான். மழையைப் போல‌
நீஅனைவர் மேல்பொழியும் அருள்தான், அன்றோ?
வலதுகரம் தருவதனை இடத றிந்தால்
வள்ளலுக்கு அழகல்ல என்பர்! ஆனால்,
வலதுகரம், இடதுகரம் இரண்டி னாலும்
வாரிவழங் கும்இன்ப வள்ளல் நீயே!

ஊர்விஷயம் தெரிந்துகொண்டு அறிஞன் ஆகும்
உத்தேசம் எனக்கில்லை. உன்விழாவில்
தேரிழுக்கும் கயிறாக இருந்தால் போதும்!
சிலர்,கிணற்றுத் தவளையென்று என்னைச் சொன்னால்
யார்கவலைப் படுகின்றார் அதனைப் பற்றி?
யவனர்களைச் சுமந்துவரும் கப்ப லே!நீ
கார்கூந்தல் மேகமிடக் கீழே மின்னல்
கனியசைத்த நாட்டியத்தால் மயங்கி விட்டேன்!

வண்ணங்கள் கண்ணின்கள், குழலும் யாழும்
வழங்குவது செவிவழிக்கள், நீகொக் கோக‌
எண்ணங்க ளால்போதை ஏற்ப டுத்தும்
இளங்கள்ளி இதழ்க்கள்ளி. இந்த ரெட்டைக்
கிண்ணங்கள் பருவச்சந் தனக்கிண் ணங்கள்!
கிழக்கதிரான் மேற்குவிழும் வேளை. சொந்தத்
திண்ணையிலே இடங்கொடுத்தால் இரவு என்னைத்
திகட்டாத உலகத்துக் கிட்டுச் செல்லும்.

பக்கம்பக் கமாயுன்னைப் புரட்டிப் பார்த்தும்
பயில்தோறும் சுவைகொடுக்கும் பாவே! வந்து
சிக்கலிலே தித்திக்கும் புறாவே! எந்தத்
திக்குமுனைக் கோடிடினும் விடாதா சைத்தீ!
பக்கலிலே படுக்கையிலே தடுக்கா தொட்டி
பழகப்ப ழகக்கொப்பு ளிக்கும் பாலே!
கைக்குள்ளே நூலிடுப்பு இருக்க, வானில்
காற்றாடி யாகட்டும் பட்டுச் சேலை.

பொதுக்கூட்ட மேடையடி மஞ்சம்! இங்கே
பொன்,அன்னம் நீயிருக்க ஏது பஞ்சம்?
கதிரவன்சா யும்நேரம் தங்க மாலை,
காஞ்சனமா லைஇந்தா அணிந்தென் பால்வா!
நிதியேஎன் பெட்டகத்தில் உறங்க வா!நீ
நிதம்இனிமேல் ஊர்க்காடும் கைதி அல்ல,
உதயச்சூரி யன்காலை எழுந்து வந்து
உதைக்கும்வரை தூங்கிடலாம் கேட்பார் இன்றி!
-நீலமணி

8 comments:

narsim said...

நல்ல பதிவு..தல‌

முரளிகண்ணன் said...

நல்லாயிருக்கு கவிதை

தமிழன்-கறுப்பி... said...

முதல் முறை வாசிச்சா பிடிபடலை இரண்டாம் முறைதான் பிடிபட்டுது...

வால்பையன் said...

ஏன் என்னை திட்டுறிங்க?

திட்டுறேனே! சார் இது தூய தமிழ் சார்!

தூய தமிழ்லெல்லாம் எனக்கு தெரியாது!

ஐ யாம் எம்.பி.எ ஃப்ரம் லண்டன்

வால்பையன் said...

படிக்கமுடியல தல
தாவூ தீருது!
மூச்சு வாங்குது!
டவுசர் கிழியுது!

ரமேஷ் வைத்யா said...

உழவன்,
ஓட்டு போட்டுவிட்டேன். பிரியாணி, இலைக்குக் கீழே நோட்டு உண்டுமா?

ரமேஷ் வைத்யா said...

நர்சிம், முரளிகண்ணன்,
ம்ம்..... என்னத்தைச் சொல்ல பாராட்டைக் கேட்டு வாங்க வேண்டியிருக்கு. கேட்டாலும் பரிசல்காரன் கொடுக்கலை. லண்டனில் எம்பி எம்பி எம்பியே படிச்சவரு பரவால்லை.

ரமேஷ் வைத்யா said...

தமிழன் கறுப்பி,
வாங்க. முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் படிப்பீர்களென்றால் மரபுக் கவிதை தொடர்ந்து போடலாம்.