Friday, June 10, 2016

தன்னைத் தானே கவனித்தல்..

சுஷில் குமார்... சீனாவில் 2008&ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம், இப்போது லண்டனில் வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இப்படி மகத்தான சாதனை படைப்பதற்கோ அல்லது தான் குறித்துக்கொண்ட குறிக்கோளைச் செம்மையாக முடிப்பதற்கோ ஒரு சிலருக்கு மட்டும் எப்படி முடிகிறது?

பிறரிடம் இல்லாத ஏதோ ஓர் உந்துசக்தி அவர்களிடம் இருக்கிறது. இதைச் செய்ய வேண்டும், இதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். பத்தாம் வகுப்பிலும் 12&ஆம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாரிடம்தான் இருக்காது? ஆனால், சிலர்தானே அதைச் சாதிக்கிறார்கள்... அதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது உந்துசக்தி. ஆங்கிலத்தில் Motivation.

படிப்பது, வேலைக்குப் போவது, பணம் சம்பாதிப்பது, பிறருடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணுவது போன்ற பல்வேறு காரியங்களுக்கு முக்கியமான ஒத்தாசையாக இருப்பது இந்த உந்துசக்திதான். நமக்கு உள்ளே இருந்தே உந்துசக்தி நமக்குக் கிடைக்கும். சில சமயம் வெளியில் இருந்தும் உருவாகி வரும். ஒவ்வொரு நபருக்கும் தக்கபடி இந்த உந்துசக்திக்கான காரணங்கள் மாறுபடும். ஊக்கப்படுத்துதல், பரிசுகள், பணம், புகழ் போன்றவை சில காரணங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ரசிகர்களின் பாராட்டுகள் அவரை ஊக்கப்படுத்தி இருக்கும். விருதுகளும் பரிசுகளும் அவரை அடுத்த படிக்கு இட்டுச் சென்றிருக்கும். அதனால் அவரது சன்மானப் பணம் படிப்படியாக உயர்ந்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும். இதனால் அவரது புகழ் அதிகரித்து, அந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்கூட அவருக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக இருந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இந்த உந்துசக்தியின் அளவுகூட நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை உடையது. நம்பிக்கை, பிறரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல தகுதிகள், இந்த உந்துசக்தியின் அளவை அதிகரிக்கும். இப்போது விளையாட்டாக ஒரு கற்பனையைப் பார்ப்போம். நீங்கள் ஒரு பென்சில் டிராயிங் படத்துக்கு கலர் அடிக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கிறார். இதில் மூன்று விதமான சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சூழ்நிலை - 1:

 நீங்கள் கலர் அடிக்க விரும்பும் வண்ணத்திலான பென்சில்களை உங்கள் நண்பர் உடனே எடுத்துக்கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீங்கள் கலர் அடித்து முடிக்கும்போது, நண்பர் உங்களைப் பாராட்டிக் கை தட்டுகிறார்.

நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் ‘பரவாயில்லை, மறுபடி முயற்சி செய்..’ என்கிறார்.

சூழ்நிலை - 2:

 நீங்கள் ஒரு கலரில் பென்சில் கேட்டால், நண்பர் இன்னொரு கலரை எடுத்துக் கொடுக்கிறார். சரியான கலரைக் கொடுத்தால், அவர் கொடுக்கும் பென்சில் கூர் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. தூரத்தில் இருந்து பென்சிலைத் தூக்கிப் போடுகிறார். ‘என்ன, மரம் சிவப்பு கலர்ல இருக்கு’ என்று கிண்டல் செய்கிறார்.

சூழ்நிலை - 3:

 உங்கள் நண்பர் எந்த விதமான உணர்வுகளையும் காட்டவில்லை. கேட்ட பென்சிலைக் கொடுக்கிறார். நீங்கள் கலர் அடிப்பதைப் பார்க்காமல் வேறு எதிலோ கவனமாக இருக்கிறார். கலர் அடித்தது நன்றாக இருந்தால் பாராட்டவில்லை. மோசமாக இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இல்லை.சரியா... இப்போது இந்த மூன்று சூழ்நிலைகளிலும் நீங்கள் கலர் அடித்த ஓவியம் என்ன மாதிரி இருக்கும் என்று நீங்களே சொல்லுங்களேன்... முதல் சூழ்நிலையில் நீங்கள் பிரமாதப்படுத்தி இருப்பீர்கள்.சூழ்நிலை இரண்டில் கலர் அடித்து முடிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். உங்கள் நண்பரின் ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி நீங்கள் கலர் அடித்தது ரொம்பவே சுமாராக இருக்கும். சூழ்நிலை மூன்றிலும் நிலைமை ஒன்றும் சுகம் இல்லை. திட்டும் கிடைக்காமல் பாராட்டும் இல்லாமல் கலர் அடிப்பது என்கிற சந்தோஷமான காரியத்தை, ஏதோ கடமைக்குச் செய்ததைப் போலச் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது ‘உந்துசக்தி’ பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா?இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன வேடத்துக்குக்கூட லாயக்கு இல்லை என்று பல இயக்குநர்களாலும்  தயாரிப்பாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள். கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகிக்கு அரசு வழங்குவதாகச் சொன்ன பரிசுப் பணம் வருடக்கணக்காகத் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் செய்தியையும் பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் துறைகளில் செய்த, செய்துவரும் சாதனைகளை நம்மால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு உதவியது, இவர்களுக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்ட உந்துசக்தி.  இந்த சுய உந்துசக்தியைக்கொண்டு நாம் ஏன் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்ளக் கூடாது?நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சரியான பாதையில் இருந்து விலகாமல் இருப்பது நமது பொறுப்பு. நாம் ஒருவேளை உடனடியாக வெற்றி பெறாமல் போகலாம். ஆனாலும், நமது சுய உந்துசக்தியையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்போம்.ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்குச் சென்றாலும் உற்சாகத்தை இழந்துவிடாமல் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விழுவது அல்ல தோல்வி; விழுந்தாலும் எழாமல் இருப்பதுதான் தோல்வி என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியும்தானே..?

வெற்றிக்கு உந்துசக்தியே முக்கியமானது.
வெளியில் இருந்து உந்துசக்தி கிடைக்காவிட்டாலும், உள்ளே இருக்கும் உந்துசக்தியைக் கண்டடைந்து பயன்படுத்துவோம்.
பிறருக்கு உந்துசக்தியாக இருப்பதையும் தொடர்வோம்.
புரிந்துகொள்வோம் உந்துசக்தியை.

நாம் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர்த்துவதும் உந்துசக்தியே.

நாம் நடந்துகொள்ளும் விதத்துக்கு நோக்கத்தைக் கொடுத்து, திசையைக் காட்டுவதுமே உந்துசக்தி.குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை எடுத்துக்கொள்வதற்கு எது உங்களைச் செலுத்துகிறதோ, தூண்டுகிறதோ அதுவே உந்துசக்தி.நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று உறுதியாக ஆசைப்பட்டால், அதை அடைவதற்கான வழி நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடக் கூடாது. உண்மையிலேயே நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், உலகமே அதற்கான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் தேவையான நபர்களையும் உதவிகளையும் நமக்குக் கொடுக்கும் என்று பரவலாகச் சொல்லப்படுவது உண்டு.அசாத்தியம் என்று தோன்றுவதைக்கூட சாதிக்க தேவை, தொலைநோக்குப் பார்வை, கனவு, ஆழ்ந்த விருப்பம் போன்றவை உதவும். தடைகளைத் தாண்டி முன்னேறவும் தோல்வி, ஊக்கமின்மை போன்றவற்றில் இருந்து மேலேறி வரவும் நாம் பழக வேண்டும். சாதனை என்றால் அதற்கு முன்பாக, தடைகளும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றில் இருந்து மேலேறி வரப் படைப்பூக்கம் மிக்க சிந்தனை அவசியம். மாணவர்களைப் பொறுத்தவரை உந்துசக்தி கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.1.சிறப்பாக இருந்தாலும் சரி, சுமாராக இருந்தாலும் சரி.. பழைய வேலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். 2.மற்றவர்களுக்கு முன்னால் வெற்றிகரமாகத் தோற்றம் அளிப்பது என்பதைவிட, எடுத்துக்கொண்ட குறிக்கோளில் கவனமாக இருப்பது.3.பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சுய தீர்மானம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு 01

நமக்கு அது தெரியும், இது தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்க, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நம்மை. யாருக்காவது தன்னையே தெரியாமல் போகுமா என்று கேள்வி எழலாம். ஆனால், நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான ஒன்று. உதாரணத்துக்கு, உங்களுக்கு எப்போது எல்லாம் தூக்கம் வரும்? இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்தால், நாம் தூக்கத்தைக்கூட நமக்கு பலன் தரும் விதத்தில் பயன்படுத்த முடியும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாகப் பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதுதான் இந்தக் குட்டித் தொடர் கட்டுரைகளின் வேலை.


‘‘அவனும் மூணு மணி நேரம்தான் படிக்கிறான். நானும் மூணு மணி நேரம்தான் படிக்கிறேன். ஆனா, எப்பவுமே அவன்தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட். அது எப்படி?”
“தினமும் பிராக்டீஸ் பண்றேன். அப்படியும் அவ 11 நிமிஷத்துல முடிக்கிற தூரம் எனக்கு 14 நிமிஷம் எடுக்குது.”

இப்படி நாம் அடிக்கடி கேட்கிற வசனங்கள் நிறைய. இதில் இருந்து என்ன தெரிகிறது? படிக்கிற நேரம், தொடர்ந்து பிராக்டீஸ் இவை இருந்தும் வெற்றிக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன?

ஓர் இடத்தில் தெளிவாகக் குவிக்கப்பட்ட கவனம்!

கவனம் இல்லாமல் அல்லது கவனச் சிதறலோடு நீங்கள் 10 மணி நேரம் படித்தாலும் அது மனதில் தங்கும் என்று நினைக்கிறீர்களா?

முழு ஆர்வம், ஒருமுகப்படுத்தல் ஆகியவைதானே கவனக்கூர்மைக்கு அடிப்படை? இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் ஒரு பழக்கமாக நமக்குள் வளரும்.

இந்த கவனக் கூர்மை என்பது நம்மை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன விளையாட்டு.

நண்பர்கள் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆளாளுக்கு வரிசையாக ஒரு நபரின் பெயரைச் சொல்வதுதான் விளையாட்டு. வாய்க்கு வந்த பெயரைச் சொல்லக் கூடாது. முதல் ஆள் ஒரு பெயரைச் சொன்னதும் அது ஆங்கிலத்தில் என்ன எழுத்தில் முடிகிறதோ, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை அடுத்த ஆள் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த அடுத்த ஆட்கள் தொடரட்டும்.

விளையாட்டில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இடையில் நிறுத்தி Cat, Tiger, Rhino என்று விலங்குகளின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கலாம். இப்படியே நகரங்கள், நதிகள் என்று தொடரலாம். இப்படிச் சில சுற்றுகள் விளையாடி முடித்ததும் யோசிப்பதற்காக ஓர் இடைவேளை விடுங்கள்.
உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்படி என்னென்ன விஷயங்கள் நடந்தன? எவை உங்களைத் திசை திருப்பின? எந்தெந்த விஷயங்கள் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவின? இதன் அடிப்படையில் படிப்பில் கவனக்கூர்மையை  செழுமைப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விளையாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பேசினால், ஒவ்வொரு விஷயம் வெளிப்படுவதை உணரலாம். விளையாட்டு பிடித்து இருந்தது, வெளியில் இருந்து வந்த சத்தத்தால் கவனம் சிதறியது, பெயரைச் சொல்லி முடித்தவர்கள், அடுத்தவருக்கு க்ளூ கொடுக்கிறேன் என்று கவனத்தைக் குறையச் செய்தார்கள்... இப்படிப் பல விஷயங்களை அறியலாம்.

டி.வி., சினிமா பார்ப்பது, கதை படிப்பது, விளையாடுவது போன்றவை பலருக்கும் ஜாலியாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் கவனக்கூர்மைக்கு உதவக்கூடியது. கவனக்கூர்மை என்பது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும்.

சத்தம், ஆர்வமின்மை போன்றவை கவனக்கூர்மையைக் குறைக்கும்.
சிறப்பான கவனக்கூர்மை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

இதில் வித்தியாசமான ஒரு விஷயம், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது நீங்கள் கவனக்கூர்மையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனால்தான், கவனச் சிதறலை ஏற்படுத்துகிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

எவை எல்லாம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று புரிந்துகொள்வதன் மூலமே அவற்றைத் தவிர்த்து, கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

வேறு வேறு நேரங்களில் தூங்குவது, இஷ்டப்பட்டபோது உடற்பயிற்சி செய்வது, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை கவனக்கூர்மைக்கு இடையூறு செய்யக்கூடியவை.

கவனக்கூர்மையை வளப்படுத்திக்கொள்ள...

 படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க, போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இரைச்சல் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

காலையிலும் இரவிலும் படியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீர்கள். படித்த விஷயத்தை மனதில் நிறுத்தும் திறனை அது குறைக்கும்.

வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், எடுத்துக்கொண்ட பாடப் பகுதியைப் படித்து முடிக்க வேண்டிய நேரத்தை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  ‘இன்றைக்குத் தமிழ்ப் பாடம் படிக்கப் போகிறேன்’ என்று மொட்டையாகத் தீர்மானித்துக்கொள்ளாதீர்கள். ‘இன்றைக்கு சமூக அறிவியலில் இரண்டு பாடங்கள், வேதியியலில் 10 கேள்விகளுக்கு விடை என்று குறிப்பாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு வேலையை முடிக்க உதவிகரமாக இருக்கும்.

ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவியுங்கள். டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பது உதவாது.

உங்கள் சிந்தனைகள் வேறு எதிலாவது அலைபாய்ந்துகொண்டிருந்தால் படிப்பதைத் தள்ளிப்போடவும்.

மனம் எதனாலாவது வருத்தமாக இருந்தாலும் படிப்பதைத் தவிர்க்கவும்.     தியானம், யோகா, எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை கவனக் குவிப்புக்கு உதவும்.  அடுத்தடுத்து ஒரே விதமான பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவும். அது எந்தப் பாடத்தில் என்ன விஷயம் வந்தது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.  

தூக்கம் வரும்போதோ... களைப்பாக இருந்தாலோ... போர் அடித்தாலோ படிப்பதை நிறுத்திவிடுங்கள். நிறைய காபி, டீ குடிப்பது சுறுசுறுப்பைத் தருவதுபோன்ற தோற்றம் தந்தாலும் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் என்பதே உண்மை.  இரும்புச் சத்தும் விட்டமின்களும்கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.  பகல் கனவு காண்பதைக் குறையுங்கள். எல்லோரும்தான் பகல் கனவு காகிறார்கள். ஆனால், அதிலேயே பொழுதை ஓட்டிவிட முடியுமா? 

அப்படி சிந்தனைக் குதிரை கற்பனை உலகில் தறிகெட்டுப் பறந்துகொண்டு இருந்தால் எழுந்து ஒரு சிறிய நடை நடக்கலாம்.  கடைசியாக, பள்ளி சம்பந்தமான வேலைகளை ரசித்து அனுபவியுங்கள். படிப்பதில் உள்ள சுவாரசியத்துக்காகப் படியுங்கள். அது உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும்.