Tuesday, May 23, 2017

இப்போதும் இனிக்கும் குறள்
Introduction of kural history mystery motive
Characters: தருண், குழலி, ராணி, தேவி, சாம், குமார்.
தருண்: பத்திரிகையில் பணி. பள்ளிக் காலத்திலேயே பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவன்.
குழலி: தருணின் மனைவி. தமிழார்வம் உள்ள பெண்.
ராணி: குழலியின் தமிழார்வத்துக்குக் காரணமான பெண். குழலியின் அம்மா. தமிழ் டீச்சர். வயது 42.
தேவி: தருணின் தங்கை. பள்ளி மாணவி. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸில் அண்ணனைப் போலவே விருப்பம் உள்ள சிறுமி. வயது 17.
சாம்: தருணின் அலுவலக நண்பன்.
குமார்: தருணின் அலுவலக நண்பன்.
*
Begins
தேவி: எங்க ஸ்கூல்ல திருவள்ளுவர் விழா கொண்டாடப்போறாங்க. நான் எல்லா ஈவெண்ட்ஸ்லயும் பார்ட்டிசிபேட் பண்ணப் போறேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி...
தருண்: வாவ்… அருமை. திருவள்ளுவர் விழாவிலேயே கவிதைப் போட்டியா? தமிழ்ல இதுவரைக்கும் உள்ள கவிஞர்களுக்கெல்லாம் தலைவர்னு திருவள்ளுவரைத்தானே சொல்ல முடியும். கவிதைப் போட்டி பொருத்தம்தான்.
குழலி: எவ்வளவு நீதிகளை எல்லாம் சொல்லியிருக்காரு! அதுவும் எத்தனையோ காலத்துக்கு முன்னால…
தருண்: அவரை வெறும் நீதி சொன்னவர்னு சுருக்கிட முடியுமா, குழலி? சொல்ற நீதியையும் கவிதையாச் சொல்றதுக்குப் பேர்போனவர் திருவள்ளுவர். அதுக்கு எடுத்துக்காட்டா எத்தனையோ திருக்குறள்களைச் சொல்லலாம். அப்பிடி கவிதையாக் கொட்டினதாலேதான் அவருக்கு, செந்நாப்போதார், பெருநாவலர்னு எல்லாம் பேரு வச்சுக் கூப்பிட்டாங்க.
சாம்: திருவள்ளுவருக்கு இன்னும் வேற பேர்கள்கூட இருக்கு, இல்ல?
குமார்: ஆமாமாம். சின்ன வயசுல படிச்சிருக்கேன். நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி… இப்பிடி நிறையப் பேர் வள்ளுவருக்கு உண்டு.
தருண்: அதே மாதிரி திருக்குறளுக்கும் நிறைய சிறப்புப் பேர்கள் இருக்கில்லையா?
குமார்: யெஸ்… உலகப் பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல், தமிழ் மறை…
ராணி: குமார், அருமை. எப்பவோ படிச்சதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க. திருவள்ளுவரோட அத்தனை பேரையும் சொல்லிட்டீங்க. அந்தப் பேர்களோட அர்த்தத்தை எல்லாம் பாத்தா அதுவே ஒரு சுவாரசியம்…
சாம்: ஆஹா… தமிழம்மா நீங்க உட்கார்ந்திருக்கிறதை ஒரு செகண்ட் மறந்துட்டு நாங்க சின்னப் புள்ளைங்க பேசிட்டோம். அந்த அர்த்தங்களை நீங்க சொல்லுங்களேம்மா…
ராணி: திருக்குறள் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினதுன்னு எல்லோரும் ஒப்புக்குறோம். தமிழ்ல அதுக்கு முந்தி வேற எந்த புத்தகமும் இல்லை. உலக நாடுகள் எல்லாமும் கூட இதை ஒப்புக்கிட்டதால திருக்குறளுக்கு முந்தி புத்தகமே இல்லைன்னு எடுத்துக்கலாம் இல்லையா? அதனாலதான் முதல் புத்தகத்தை எழுதின திருவள்ளுவரை ‘முதற்பாவலர்’னு சொல்றாங்க. செய்யுளைப் பாடல்னும் சொல்ற வழக்கம் தமிழ் இலக்கியத்துல இருக்கு. தன்னோட கருத்துகளை எல்லாம் செய்யுள் வடிவத்துல, அதாவது பாடல் வடிவத்துல எழுதுறவர் பாவலர். அதில் முதல் ஆள், திருவள்ளுவர், அதனால அவர்தான் ‘முதற்பாவலர்’.
குழலி: எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆச்சரியம்மா… எழுதணும்னு திருவள்ளுவருக்கு எப்பிடித் தோணியிருக்கும்?
தருண்: அப்பிடிப் போடு, அத்தை, இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.
ராணி (சிரித்துக்கொண்டே): குழலி கேக்குறது அற்புதமான சந்தேகம். ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால மனுஷங்களோட சூழ்நிலை எப்பிடி இருந்திருக்கும்? டெக்னாலஜி கிடையாது, நல்ல வீடு கிடையாது; ஏன், கரண்ட்கூடக் கிடையாது. வாழணும்னா, நாமளே உடல் உழைப்பு செஞ்சாத்தான் உண்டு. அந்தச் சூழ்நிலையில ஒரு மனுஷனுக்கு தோணியிருக்கு, தனக்குத் தெரிஞ்ச உண்மைகளை, நியாயங்களை இந்த உலகத்துக்குச் சொல்லணும்னு. அதுவும் மனசுல பதியிற மாதிரி சந்தத்தோட, இலக்கணத்தோட! குகைக்குள்ளேயும் குடிசைக்குள்ளேயும் தங்கிக்கிட்டு, மழை எப்ப வருமோ, புயல் எப்ப தாக்குமோன்னு பயந்துக்கிட்டு, பழம் எங்கே கிடைக்கும், கிழங்கு எங்கே அகழ்ந்து எடுக்கலாம்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்குற கூட்டத்துல ஒரு மனுஷனுக்கு மட்டும் எழுதணும்னு தோணியிருக்கே… அதுதான் க்ரியேட்டிவிடி. படைப்பூக்கம். அந்த இக்கட்டுகளுக்கு மத்தியிலேயும் எந்த விமர்சனத்தையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காம எழுதின அந்த மனசுக்காகத்தான் திருவள்ளுவருக்கு, மனிதர்களுக்கு மத்தியில ‘தேவன்’ அப்டீன்னு பேர். அதே காரணத்துனாலதான் தெய்வப் புலவர்னும் சொன்னாங்க. படைப்புக்கடவுள் பிரம்மனோட பேரான ‘நான்முகனார்’னும் திருவள்ளுவரைக் குறிப்பிட்டாங்க…
தருண்: அங்கீகாரம் கிடைக்காட்டிக் கூடப் பரவாயில்லை, எவ்வளவு கேலி, கிண்டல்களை சந்திச்சிருப்பாரு…
சாம்: அதே, அதே… மனசுக்குத் தோணினதை எல்லாம் ஃபேஸ்புக்குல போட்டுட்டு, அருமை தோழர், பிரமாதம் சகோன்னு கமெண்ட் பாக்க முடியுமா அப்பல்லாம்?
குமார்: திருக்குறள் முதல் முதல்ல அச்சுலே வந்ததே, 1812- லதான். அச்சுக்குக் கொண்டுவந்தவர் தஞ்சை ஞானப்பிரகாசர்னு சொல்றாங்க.
ராணி: ஸோ, எழுதும்போது பனை ஓலையில தான் கீறிக் கீறித்தான் எழுதியிருப்பார். திருவள்ளுவரோட ஆணி முக்கியம்தானே?
குழலி: ஹாஹாஹா… அம்மா பழசுலேருந்து டக்குனு கரண்ட் ட்ரெண்டுக்கு மாறுறாங்க பாருங்க…
தேவி: திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதின திருவள்ளுவருக்குப் பின்னாடி இவ்வளவு ஸ்பெஷாலிட்டி இருக்கா?
ராணி: வெயிட் வெயிட். திருவள்ளுவர், திருக்குறள்ங்கிற புத்தகத்தை எழுதலை. அவர் அப்பப்ப எழுதின சிந்தனைகள்தான் பிற்காலத்துல புத்தகமா மாறிச்சு. அவர் எழுதினது எல்லாம், குறள் வெண்பாங்கிற இலக்கணத்துக்குள்ள அடங்கி இருந்ததால அதுக்கெல்லாம் குறள்னு பேர் வந்துது. பெருமையாச் சொல்றதுக்காக, திருக்குறள்னு வச்சாங்க.
குமார்: ஓ… குறள் வெண்பாங்கிற இலக்கணத்துக்குள்ளதான் திருக்குறள் இருக்கா?
ராணி: ஆமா, இப்போ, ட்விட்டர்ல நூத்தி நாப்பது எழுத்துக்குள்ள (கேரக்டர்) விஷயத்தைச் சொல்லணும்னு வச்சிருக்காங்களே, அது மாதிரி. நாலு ப்ளஸ் மூணு சீர்ல, அதாவது ரெண்டு அடியில விஷயத்தைச் சொல்லி முடிக்கணும். அதான் குறள் வெண்பா.
குழலி: எப்பிடி கச்சிதமா நூத்தி முப்பத்து மூணு டாபிக், ஒவ்வொரு டாபிக்குக்கும் பத்து குறள்னு ஆயிரத்து முன்னூத்து முப்பது குறள் எழுதணும்னு முடிவு பண்ணினார் வள்ளுவர்?
ராணி: இல்லை இல்லை, அவர் நிறைய எழுதினாராம். பிற்காலத்துல தேடினவங்களுக்குக் கிடைச்சது 1330 குறள்கள்தானாம். இப்படி ஒரு வரலாறும் இருக்கு.
தருண்: அட! அந்த காணாமப் போன குறள்களும் கிடைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்…
சாம்: இப்பவே, வள்ளுவர் தொடாத டாபிக்கே இல்லைங்கிற மாதிரிதானே இருக்கு…
தேவி: இன்னிக்கு இருக்குற சூழ்நிலை வேற ஆச்சே… டெக்னாலஜி இம்ப்ரூவ்மெண்ட், மாடர்ன் ப்ராப்ளம்ஸ்…
தருண்: இல்லம்மா… ஃபேஸ்புக் பத்தி திருக்குறள் இருக்கான்னு பார்க்கக் கூடாது. ஃபேஸ்புக்குங்கிறது என்ன? ஒரு தகவல் தொடர்பு சாதனம். பிறரோட நாம உறவாட, உரையாட ஒரு கருவி. அதுல எப்படி நடந்துக்கணும், எந்த மாதிரி பேசக்கூடாதுங்கிற எட்டிக்கெட் எல்லாம் இருக்கு இல்லையா? அதை வள்ளுவர் அப்பவே சொல்லி வச்சிருக்காரு. ‘ஃபேஸ்புக்ல சும்மா வளவளன்னு எழுதினா யாரும் படிக்க மாட்டாங்க. டு தி பாயிண்ட் எழுதினாத்தான் லைக்ஸும் கமெண்ட்ஸும் கிடைக்கும்’னு வள்ளுவர் எழுத வாய்ப்பில்லை. ஆனா, ‘இன்னிக்கு தேவி போட்டுருக்கிற ஸ்டேட்டஸ் காலையில இருந்து மனசுல சுத்திக்கேட்டே இருக்குடி’ன்னும்; ‘இன்னிக்கு தேவி ஃபேஸ்புக்ல ஏதோ ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணியிருக்காளாமே… எல்லாரும் அதைப் பத்தியே பேசுறாங்களே’ன்னும் சொல்ற மாதிரி ஸ்டேட்டஸ் போடணும். இந்த அர்த்தத்துலதான் வள்ளுவர்,
‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்’ ங்கிற குறள்ல சொல்றாரு…
தேவி: ஓ.எம்.ஜி… வள்ளுவர் இஸ் அமேஜ்ஸிங்…
குழலி: ஓ மை காட்ங்கிறதை தேவி எப்பிடிச் சொல்றா பாருங்க… இதே மாதிரிதானே வள்ளுவர் ரெண்டே வரியில தான் சொல்ல வந்த கருத்தை முழுசாச் சொல்லியிருக்கார்..!
தருண்: அதனாலதானே மத்த புலவர்கள் எல்லாம் திருவள்ளுவரைத் தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க.
ராணி: ஆமாமா… ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு கொண்டாடினார் இடைக்காடர்ங்கிற புலவர். கடுகு உதாரணம்கூட ஔவையாருக்குப் பொருத்தமாத் தோணலை. அதனால, ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’னு மேலேயும் பெருமை சேத்தாங்க.
தருண்: கரெக்டாச் சொன்னீங்க அத்தை. இந்தப் பாட்டுகளை கூகுள்ல தேடும்போது எனக்கு இன்னும் சுவாரசியமான சில பாட்டுகள் கிடைச்சுது.
‘வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்திங்கள்
பொள்ளென நீக்கும் புறஇருளை – தெள்ளிய
வள்ளுவ ரின்குறள் வெண்பா அகிலத்தோர்
உள்ளிருள் நீக்கும் ஒளி’ ன்னு மதுரைப் பாலாசிரியனார் பாடியிருக்கார்.
ஆலங்குடி வங்கனார்னு இன்னொரு புலவர்,
‘வள்ளுவர் பாட்டின் வளம்உரைக்கின் வாய்மடுக்கும்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் – தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து’
பாடியிருக்கார்.
பலப்பல வருஷங்களுக்கு அப்பறமா வந்த பாரதியாருக்குக்கூட வள்ளுவர் மேல ஆச்சரியம் குறையலையே…
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாவருமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ன்னு சொல்லிச் சொல்லிப் பாராட்டினார்.  
ராணி: எல்லாக் காலத்திலேயும் எல்லாருக்கும் தேவையான எல்லா மருந்தும் திருக்குறள்ல இருக்கும். அதிலேயும், திருக்குறள் ஒரு மெடிக்கல் ஷாப் மாதிரின்னுகூடச் சொல்லலாம். பேதி ஆகுறதுக்கும் மருந்து இருக்கும். பேதியை நிறுத்துறதுக்கும் மருந்து இருக்கும். நமக்கு அந்த நேரத்துக்கு எது தேவையோ அதை எடுத்துக்கலாம்.
தருண்: அத்தை இஸ் அமேஜ்ஸிங்.
சாம்: சமூகத்தோட நோயைத் தீர்க்குற மருந்தை மட்டும் திருக்குறள் குடுக்கலை; சமூகத்துக்கு நோய் வராம இருக்குறதுக்கும் ப்ரிவென்ஷன் மெத்தட்ஸ் சொல்லுது. அந்த வகையில திருக்குறள் கிரேட்தான்…
குமார்: அந்த ஸ்பெஷாலிட்டி இருக்கறதாலதானே ஏராளமான உலக மொழிகள்ல திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கு…
தருண்: ஆமா, பைபிள்தான் உலகத்திலேயே அதிகமான மொழிகள்ல வந்திருக்கு. அது மத நூல். அப்பிடி ஒரு மத நூலா இல்லாத புத்தகம் திருக்குறள். இருந்தாலும், பைபிளுக்கு அடுத்த படியா நூத்துக்கும் அதிகமான மொழிகள்ல மொழிபெயர்க்கப்பட்டு உலகத்தோட எல்லாப் பகுதிகள்லேயும் இதை ஆர்வமாவும் ஆச்சரியத்தோடவும் படிக்கிறாங்க.
தேவி: சந்தேகமே இல்லாம, திருக்குறளை, ‘தமிழோட பெருமை’ன்னு சொல்லலாம் இல்லையா, ஆன்ட்டி?
ராணி: அதுல என்ன சந்தேகம்? ஆனா, அப்படிப்பட்ட திருக்குறள்ல ‘தமிழ்’னு ஒரு சொல்லே இல்லை!!
தேவி: ஹைய்ய்யோஓஓஓ… சூப்பர்…
ராணி: இதுக்கே அசந்தா எப்பிடி? இன்னும் இது மாதிரி நிறைய சுவாரசியங்கள் திருக்குறள்ல உண்டு.
சாம்: ப்ளீஸ் சொல்லுங்க தெரிஞ்சுப்போம்.
ராணி:  கடவுள்ங்கிற சொல் கூட குறள்ல இல்லை. எழுத்துன்னு எடுத்துக்கிட்டா, குறள்ல வராத ஒரே உயிரெழுத்து ஔ. வராததை விட்டுறலாம். வந்ததைப் பார்த்தா, பற்று-ங்கிற வார்த்தை ஒரே குறள்ல ஆறு தடவை வந்திருக்கு.
தேவி: ஐ… எனக்கு அந்தக் குறள் தெரியும்… ‘பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. சரிதானே…
ராணி: தேவி சொன்னா தப்பா இருக்குமா? இன்னும் கவனமா திருக்குறளைப் படிச்சேன்னா, திருக்குறளுக்கு நீ குட்டிப் பசங்களுக்கான உரையே எழுதலாம்.
தேவி: வாவ்…
ராணி: முதல் முதல்ல திருக்குறளுக்கு உரை எழுதினவர், மணக்குடவர். அப்பறம் எத்தனையோ பேர் எழுதிட்டாங்க. மு.வரதராசனார் எழுதின உரை ரொம்ப ஃபேமஸ். அதே மாதிரி திருக்குறளை இங்லீஷ்ல முதல்ல மொழி பெயர்த்தவர் ஜி.யூ. போப். இன்னிக்கு வரைக்கும் பல மொழிகள்ல மொழி பெயர்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க.
சாம்: இன்னிக்கும் குறள் ரெலவண்ட்டா இருக்கே…
ராணி: இன்னிக்கு இருக்கிற சூழ்நிலையில திருக்குறள் எவ்வளவு பொருத்தமானதுன்னு தான் தொடர்ந்து பேசப்போறோம் இல்லையா…
தருண்: நிச்சயமா அத்தை. அந்த பேச்சுல இருந்தே தேவி தன்னோட போட்டிகளுக்குத் தேவையான ஸ்டஃப்-ஐ எல்லாம் எடுத்துப்பா…
*
பரிந்துரைக்கப்படக் கூடிய தமிழ்த் திரைப் பாடல்கள்
நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே ......

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
உலகுக்கு ஒளிபோலே உடலுக்கு உயிர்போலே
பயிருக்கு மழைபோலே பைந்தமிழ் மொழியாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தலைபோலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம் மொழி மெய்யினிக்கே வார்த்திட்ட தேனிது
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது
எம் மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே… 

Friday, June 10, 2016

தன்னைத் தானே கவனித்தல்..

சுஷில் குமார்... சீனாவில் 2008&ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம், இப்போது லண்டனில் வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர். இப்படி மகத்தான சாதனை படைப்பதற்கோ அல்லது தான் குறித்துக்கொண்ட குறிக்கோளைச் செம்மையாக முடிப்பதற்கோ ஒரு சிலருக்கு மட்டும் எப்படி முடிகிறது?

பிறரிடம் இல்லாத ஏதோ ஓர் உந்துசக்தி அவர்களிடம் இருக்கிறது. இதைச் செய்ய வேண்டும், இதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் எல்லோரிடமும் இருக்கும். பத்தாம் வகுப்பிலும் 12&ஆம் வகுப்பிலும் மாநில அளவில் ரேங்க் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாரிடம்தான் இருக்காது? ஆனால், சிலர்தானே அதைச் சாதிக்கிறார்கள்... அதற்கு அவர்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்தது உந்துசக்தி. ஆங்கிலத்தில் Motivation.

படிப்பது, வேலைக்குப் போவது, பணம் சம்பாதிப்பது, பிறருடனான உறவுகளைச் சிறப்பாகப் பேணுவது போன்ற பல்வேறு காரியங்களுக்கு முக்கியமான ஒத்தாசையாக இருப்பது இந்த உந்துசக்திதான். நமக்கு உள்ளே இருந்தே உந்துசக்தி நமக்குக் கிடைக்கும். சில சமயம் வெளியில் இருந்தும் உருவாகி வரும். ஒவ்வொரு நபருக்கும் தக்கபடி இந்த உந்துசக்திக்கான காரணங்கள் மாறுபடும். ஊக்கப்படுத்துதல், பரிசுகள், பணம், புகழ் போன்றவை சில காரணங்கள்.
உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமா நடிகரை எடுத்துக்கொள்ளுங்கள், ரசிகர்களின் பாராட்டுகள் அவரை ஊக்கப்படுத்தி இருக்கும். விருதுகளும் பரிசுகளும் அவரை அடுத்த படிக்கு இட்டுச் சென்றிருக்கும். அதனால் அவரது சன்மானப் பணம் படிப்படியாக உயர்ந்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கும். இதனால் அவரது புகழ் அதிகரித்து, அந்தப் புகழைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்கிற எண்ணம்கூட அவருக்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக இருந்து இருப்பதை நீங்கள் உணர முடியும்.

இந்த உந்துசக்தியின் அளவுகூட நேரத்துக்கு நேரம் மாறுபடும் தன்மை உடையது. நம்பிக்கை, பிறரின் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, ஒரு வேலையைத் தொடர்ந்து செய்யும் தன்மை, ஒழுக்கம் போன்ற பல தகுதிகள், இந்த உந்துசக்தியின் அளவை அதிகரிக்கும். இப்போது விளையாட்டாக ஒரு கற்பனையைப் பார்ப்போம். நீங்கள் ஒரு பென்சில் டிராயிங் படத்துக்கு கலர் அடிக்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருக்கிறார். இதில் மூன்று விதமான சூழ்நிலைகளைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

சூழ்நிலை - 1:

 நீங்கள் கலர் அடிக்க விரும்பும் வண்ணத்திலான பென்சில்களை உங்கள் நண்பர் உடனே எடுத்துக்கொடுக்கிறார். படத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் நீங்கள் கலர் அடித்து முடிக்கும்போது, நண்பர் உங்களைப் பாராட்டிக் கை தட்டுகிறார்.

நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால் ‘பரவாயில்லை, மறுபடி முயற்சி செய்..’ என்கிறார்.

சூழ்நிலை - 2:

 நீங்கள் ஒரு கலரில் பென்சில் கேட்டால், நண்பர் இன்னொரு கலரை எடுத்துக் கொடுக்கிறார். சரியான கலரைக் கொடுத்தால், அவர் கொடுக்கும் பென்சில் கூர் இல்லாமல் மொட்டையாக இருக்கிறது. தூரத்தில் இருந்து பென்சிலைத் தூக்கிப் போடுகிறார். ‘என்ன, மரம் சிவப்பு கலர்ல இருக்கு’ என்று கிண்டல் செய்கிறார்.

சூழ்நிலை - 3:

 உங்கள் நண்பர் எந்த விதமான உணர்வுகளையும் காட்டவில்லை. கேட்ட பென்சிலைக் கொடுக்கிறார். நீங்கள் கலர் அடிப்பதைப் பார்க்காமல் வேறு எதிலோ கவனமாக இருக்கிறார். கலர் அடித்தது நன்றாக இருந்தால் பாராட்டவில்லை. மோசமாக இருந்தால் சுட்டிக்காட்டுவதும் இல்லை.சரியா... இப்போது இந்த மூன்று சூழ்நிலைகளிலும் நீங்கள் கலர் அடித்த ஓவியம் என்ன மாதிரி இருக்கும் என்று நீங்களே சொல்லுங்களேன்... முதல் சூழ்நிலையில் நீங்கள் பிரமாதப்படுத்தி இருப்பீர்கள்.சூழ்நிலை இரண்டில் கலர் அடித்து முடிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும். உங்கள் நண்பரின் ஒத்துழையாமை இயக்கத்தையும் மீறி நீங்கள் கலர் அடித்தது ரொம்பவே சுமாராக இருக்கும். சூழ்நிலை மூன்றிலும் நிலைமை ஒன்றும் சுகம் இல்லை. திட்டும் கிடைக்காமல் பாராட்டும் இல்லாமல் கலர் அடிப்பது என்கிற சந்தோஷமான காரியத்தை, ஏதோ கடமைக்குச் செய்ததைப் போலச் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது ‘உந்துசக்தி’ பற்றிய ஒரு சித்திரம் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா?இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் பார்க்க வேண்டி இருக்கிறது. அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன வேடத்துக்குக்கூட லாயக்கு இல்லை என்று பல இயக்குநர்களாலும்  தயாரிப்பாளர்களாலும் ஒதுக்கப்பட்டவர்கள். கேரம் விளையாட்டு சாம்பியன் இளவழகிக்கு அரசு வழங்குவதாகச் சொன்ன பரிசுப் பணம் வருடக்கணக்காகத் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் செய்தியையும் பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தங்கள் துறைகளில் செய்த, செய்துவரும் சாதனைகளை நம்மால் வியந்து பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு உதவியது, இவர்களுக்கு உள்ளேயே சேமித்து வைக்கப்பட்ட உந்துசக்தி.  இந்த சுய உந்துசக்தியைக்கொண்டு நாம் ஏன் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்ளக் கூடாது?நம் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்ட சரியான பாதையில் இருந்து விலகாமல் இருப்பது நமது பொறுப்பு. நாம் ஒருவேளை உடனடியாக வெற்றி பெறாமல் போகலாம். ஆனாலும், நமது சுய உந்துசக்தியையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கைவிட்டுவிடக் கூடாது. எப்போதும் உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் இருப்போம்.ஒரு தோல்வியில் இருந்து இன்னொரு தோல்விக்குச் சென்றாலும் உற்சாகத்தை இழந்துவிடாமல் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். விழுவது அல்ல தோல்வி; விழுந்தாலும் எழாமல் இருப்பதுதான் தோல்வி என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியும்தானே..?

வெற்றிக்கு உந்துசக்தியே முக்கியமானது.
வெளியில் இருந்து உந்துசக்தி கிடைக்காவிட்டாலும், உள்ளே இருக்கும் உந்துசக்தியைக் கண்டடைந்து பயன்படுத்துவோம்.
பிறருக்கு உந்துசக்தியாக இருப்பதையும் தொடர்வோம்.
புரிந்துகொள்வோம் உந்துசக்தியை.

நாம் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உணர்த்துவதும் உந்துசக்தியே.

நாம் நடந்துகொள்ளும் விதத்துக்கு நோக்கத்தைக் கொடுத்து, திசையைக் காட்டுவதுமே உந்துசக்தி.குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வேலையை எடுத்துக்கொள்வதற்கு எது உங்களைச் செலுத்துகிறதோ, தூண்டுகிறதோ அதுவே உந்துசக்தி.நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று உறுதியாக ஆசைப்பட்டால், அதை அடைவதற்கான வழி நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் முயற்சிப்பதை நிறுத்திவிடக் கூடாது. உண்மையிலேயே நாம் ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்று விரும்பினால், உலகமே அதற்கான சூழ்நிலைகளையும் வாய்ப்புகளையும் தேவையான நபர்களையும் உதவிகளையும் நமக்குக் கொடுக்கும் என்று பரவலாகச் சொல்லப்படுவது உண்டு.அசாத்தியம் என்று தோன்றுவதைக்கூட சாதிக்க தேவை, தொலைநோக்குப் பார்வை, கனவு, ஆழ்ந்த விருப்பம் போன்றவை உதவும். தடைகளைத் தாண்டி முன்னேறவும் தோல்வி, ஊக்கமின்மை போன்றவற்றில் இருந்து மேலேறி வரவும் நாம் பழக வேண்டும். சாதனை என்றால் அதற்கு முன்பாக, தடைகளும் தோல்விகளும் இருக்கத்தான் செய்யும். அவற்றில் இருந்து மேலேறி வரப் படைப்பூக்கம் மிக்க சிந்தனை அவசியம். மாணவர்களைப் பொறுத்தவரை உந்துசக்தி கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைச் சார்ந்து இருக்கிறது.1.சிறப்பாக இருந்தாலும் சரி, சுமாராக இருந்தாலும் சரி.. பழைய வேலைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளுதல். 2.மற்றவர்களுக்கு முன்னால் வெற்றிகரமாகத் தோற்றம் அளிப்பது என்பதைவிட, எடுத்துக்கொண்ட குறிக்கோளில் கவனமாக இருப்பது.3.பிறரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் சுய தீர்மானம்.

உங்களைத் தெரியுமா உங்களுக்கு 01

நமக்கு அது தெரியும், இது தெரியும் என்பது ஒரு பக்கம் இருக்க, முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது நம்மை. யாருக்காவது தன்னையே தெரியாமல் போகுமா என்று கேள்வி எழலாம். ஆனால், நம்மைப் பற்றி நாம் நன்றாகத் தெரிந்துகொள்வது வாழ்க்கைத் திறன்களில் முக்கியமான ஒன்று. உதாரணத்துக்கு, உங்களுக்கு எப்போது எல்லாம் தூக்கம் வரும்? இந்தக் கேள்விக்கு சரியான விடை தெரிந்தால், நாம் தூக்கத்தைக்கூட நமக்கு பலன் தரும் விதத்தில் பயன்படுத்த முடியும். இதுபோல சின்னச் சின்ன விஷயங்களின் மூலமாகப் பெரிய பெரிய விஷயங்களை விளக்குவதுதான் இந்தக் குட்டித் தொடர் கட்டுரைகளின் வேலை.


‘‘அவனும் மூணு மணி நேரம்தான் படிக்கிறான். நானும் மூணு மணி நேரம்தான் படிக்கிறேன். ஆனா, எப்பவுமே அவன்தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட். அது எப்படி?”
“தினமும் பிராக்டீஸ் பண்றேன். அப்படியும் அவ 11 நிமிஷத்துல முடிக்கிற தூரம் எனக்கு 14 நிமிஷம் எடுக்குது.”

இப்படி நாம் அடிக்கடி கேட்கிற வசனங்கள் நிறைய. இதில் இருந்து என்ன தெரிகிறது? படிக்கிற நேரம், தொடர்ந்து பிராக்டீஸ் இவை இருந்தும் வெற்றிக்கு வேறு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன?

ஓர் இடத்தில் தெளிவாகக் குவிக்கப்பட்ட கவனம்!

கவனம் இல்லாமல் அல்லது கவனச் சிதறலோடு நீங்கள் 10 மணி நேரம் படித்தாலும் அது மனதில் தங்கும் என்று நினைக்கிறீர்களா?

முழு ஆர்வம், ஒருமுகப்படுத்தல் ஆகியவைதானே கவனக்கூர்மைக்கு அடிப்படை? இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்தான் ஒரு பழக்கமாக நமக்குள் வளரும்.

இந்த கவனக் கூர்மை என்பது நம்மை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சின்ன விளையாட்டு.

நண்பர்கள் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். ஆளாளுக்கு வரிசையாக ஒரு நபரின் பெயரைச் சொல்வதுதான் விளையாட்டு. வாய்க்கு வந்த பெயரைச் சொல்லக் கூடாது. முதல் ஆள் ஒரு பெயரைச் சொன்னதும் அது ஆங்கிலத்தில் என்ன எழுத்தில் முடிகிறதோ, அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு பெயரை அடுத்த ஆள் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த அடுத்த ஆட்கள் தொடரட்டும்.

விளையாட்டில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இடையில் நிறுத்தி Cat, Tiger, Rhino என்று விலங்குகளின் பெயரைச் சொல்ல ஆரம்பிக்கலாம். இப்படியே நகரங்கள், நதிகள் என்று தொடரலாம். இப்படிச் சில சுற்றுகள் விளையாடி முடித்ததும் யோசிப்பதற்காக ஓர் இடைவேளை விடுங்கள்.
உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும்படி என்னென்ன விஷயங்கள் நடந்தன? எவை உங்களைத் திசை திருப்பின? எந்தெந்த விஷயங்கள் உங்கள் கவனத்தைக் கூர்மைப்படுத்த உதவின? இதன் அடிப்படையில் படிப்பில் கவனக்கூர்மையை  செழுமைப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விளையாட்டில் பங்கேற்ற ஒவ்வொருவரிடமும் பேசினால், ஒவ்வொரு விஷயம் வெளிப்படுவதை உணரலாம். விளையாட்டு பிடித்து இருந்தது, வெளியில் இருந்து வந்த சத்தத்தால் கவனம் சிதறியது, பெயரைச் சொல்லி முடித்தவர்கள், அடுத்தவருக்கு க்ளூ கொடுக்கிறேன் என்று கவனத்தைக் குறையச் செய்தார்கள்... இப்படிப் பல விஷயங்களை அறியலாம்.

டி.வி., சினிமா பார்ப்பது, கதை படிப்பது, விளையாடுவது போன்றவை பலருக்கும் ஜாலியாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமே காரணம். ஆர்வம் கவனக்கூர்மைக்கு உதவக்கூடியது. கவனக்கூர்மை என்பது ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும்.

சத்தம், ஆர்வமின்மை போன்றவை கவனக்கூர்மையைக் குறைக்கும்.
சிறப்பான கவனக்கூர்மை நேரத்தை மிச்சப்படுத்துகிறது. கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

இதில் வித்தியாசமான ஒரு விஷயம், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது நீங்கள் கவனக்கூர்மையைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தால் உங்கள் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனால்தான், கவனச் சிதறலை ஏற்படுத்துகிற விஷயங்களைக் குறைப்பதன் மூலம் கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

எவை எல்லாம் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கிறது என்று புரிந்துகொள்வதன் மூலமே அவற்றைத் தவிர்த்து, கவனக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

வேறு வேறு நேரங்களில் தூங்குவது, இஷ்டப்பட்டபோது உடற்பயிற்சி செய்வது, நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவது போன்றவை கவனக்கூர்மைக்கு இடையூறு செய்யக்கூடியவை.

கவனக்கூர்மையை வளப்படுத்திக்கொள்ள...

 படிக்கும்போது கவனம் சிதறாமல் இருக்க, போதுமான வெளிச்சம், காற்றோட்டம், இரைச்சல் குறைவாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

காலையிலும் இரவிலும் படியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்காதீர்கள். படித்த விஷயத்தை மனதில் நிறுத்தும் திறனை அது குறைக்கும்.

வாசிக்கத் தொடங்குவதற்கு முன்னால், எடுத்துக்கொண்ட பாடப் பகுதியைப் படித்து முடிக்க வேண்டிய நேரத்தை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.  ‘இன்றைக்குத் தமிழ்ப் பாடம் படிக்கப் போகிறேன்’ என்று மொட்டையாகத் தீர்மானித்துக்கொள்ளாதீர்கள். ‘இன்றைக்கு சமூக அறிவியலில் இரண்டு பாடங்கள், வேதியியலில் 10 கேள்விகளுக்கு விடை என்று குறிப்பாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். தெளிவான இலக்கு வேலையை முடிக்க உதவிகரமாக இருக்கும்.

ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவியுங்கள். டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பது உதவாது.

உங்கள் சிந்தனைகள் வேறு எதிலாவது அலைபாய்ந்துகொண்டிருந்தால் படிப்பதைத் தள்ளிப்போடவும்.

மனம் எதனாலாவது வருத்தமாக இருந்தாலும் படிப்பதைத் தவிர்க்கவும்.     தியானம், யோகா, எளிய சுவாசப் பயிற்சிகள் போன்றவை கவனக் குவிப்புக்கு உதவும்.  அடுத்தடுத்து ஒரே விதமான பாடங்களைப் படிப்பதைத் தவிர்க்கவும். அது எந்தப் பாடத்தில் என்ன விஷயம் வந்தது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.  

தூக்கம் வரும்போதோ... களைப்பாக இருந்தாலோ... போர் அடித்தாலோ படிப்பதை நிறுத்திவிடுங்கள். நிறைய காபி, டீ குடிப்பது சுறுசுறுப்பைத் தருவதுபோன்ற தோற்றம் தந்தாலும் சிந்திக்கும் திறனைக் குறைக்கும் என்பதே உண்மை.  இரும்புச் சத்தும் விட்டமின்களும்கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.  பகல் கனவு காண்பதைக் குறையுங்கள். எல்லோரும்தான் பகல் கனவு காகிறார்கள். ஆனால், அதிலேயே பொழுதை ஓட்டிவிட முடியுமா? 

அப்படி சிந்தனைக் குதிரை கற்பனை உலகில் தறிகெட்டுப் பறந்துகொண்டு இருந்தால் எழுந்து ஒரு சிறிய நடை நடக்கலாம்.  கடைசியாக, பள்ளி சம்பந்தமான வேலைகளை ரசித்து அனுபவியுங்கள். படிப்பதில் உள்ள சுவாரசியத்துக்காகப் படியுங்கள். அது உங்களுக்கு எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்கும்.

Friday, March 25, 2016

சின்னாத்து மண்ணே என் பொன்னே

சின்னாத்து மண்ணே எம் பொன்னே
செருவாட்டுக் காசா என் ரோசா
செலவாகிப் போகாதே செல்லம்மா செல்லம்மா
செலவாகிப் போகாதே செல்லம்மா
1. மண்சரிஞ்சு பங்கப்பட்ட
பந்தக்காலு பள்ளத்திலும்
மஞ்சணத்திப் புல்துளிர்க்கும் மந்திரமாய்… (பத்திரமா
நேந்துவச்ச உண்டிக்காச
சாமியே திருடுமா
காவல்நிக்கும் எல்லச்சாமி
காலனா மருவுமா சொல்லம்மா… நீ சொல்லம்மா
செல்லம்மா ஏஞ் செல்லம்மா (ஏலேலம்மா/சின்னாத்து மண்ணே
2. பச்சைப்பல்லில் புன்சிரிக்கும்
பட்டுப்போலப் புல்வெளியும்
பச்சைப்பாம்பை வச்சிருக்கும் கண்மறைவா
கோடிஉசிர் செஞ்ச பாவி (சாமி)
கோடிக்கும் உறவுதான்
ஒண்ணிருக்கும் ஒண்ணுபோகும்
நேர்ப்படும் கணக்குதான்
துன்பமே இன்பம்தான்
செல்லம்மா ஏஞ்செல்லம்மா (ஏலேலம்மா
3. நேத்திருந்தோம் வீட்டுக்குள்ளே
காத்தடிச்ச வேகத்திலே
சாஞ்சிருச்சு கூரையெல்லாம் சங்கடமா
நீலவண்ணப் புள்ளிவானம்
 கூரையா ஜொலிக்குமே
மேகவெள்ளைப் பஞ்சுக் கூட்டம்
தோரணம் அசைக்குமே
இல்லைகள் இல்லையே
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
4. பொன்வண்டுக்கு வத்திப்பெட்டி
உள்ளுக்குள்ள மெத்தைகட்டி
வச்சிருந்தேன் பொத்திப்பொத்தி பத்திரமா
காலொசத்தி முட்டைபோடும்
காட்சிதான் கிடைக்குமா
நூலறுத்து தப்பியோடும்
சூழ்ச்சிதான் நடக்குமா
செல்லம்மா ஏஞ்செல்லம்மா
5. நள்ளிரவு விண்வெளியில்
நட்சத்திரப் பந்தலைப் போல்
பிள்ளையுந்தன் மென்சிரிப்பு (மென்னகைதான்)
கொல்லுவதோ (கொல்லுதடி)
காலையொளி பட்டதாலே
மீனெல்லாம் உதிர்ந்ததோ
வேளைவரும் அந்த ராவில்
 தோன்றவே மறைந்ததோ
 செல்லம்மா… செல்லம்மா

கபி கபி மேரே தில் மே


எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நீஇந்த உலகில்
வந்தாயோ என்னோடு சேர என
நீமுந்தைய பிறப்பில்
விண்மீனாய்மின் னியவளோ என்று
 உனைக் கொணர்ந்தார் மண்மேலே
என்னோடு வாழ்கவென
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஜோடி கை, உன் தோள்கள்
என்றும் என் ஆஸ்தி என
 உன் நீண்ட கூந்தல் நிழல் போக்கும்
எந்தன் வெய்யில் உன் ஈர இதழ், கரங்கள்
என் ஆஸ்தி என
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 நான் போகும் சாலையில்
ஷெனாயின் பாடல் வந்தாற்போல்
 நம் சாந்தி ராத்திரி
பூந்துகில் தொடாமலா போவேன்
 உள்ளங்கைக்குள்ளே தான்
சுருங்காய் உன் வெட்கத்தாலே நீ
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்
 உன் ஆயுளெல்லாம் இதைப் போலே
உன் அன்பு தாராய் நீ
 உன் நாட்கள் யாவும் இதே காதலின்
பார்வை வீசாய் முன் உன்னை அறியேன்
உனக்கும் அதேதானே
 எப்போதும்என் மனதுள்ளே
ஓர்எண்ணமே தோன்றும்

எரிமலையின் சிகரத்தில்
பனி பெய்வதை
கடற்கரை ஓரம் நடக்கையில் பார்த்தேன்

எங்கள் வீட்டுப்பக்கம் புல்தரை இருக்கும்
அங்கே பவழமல்லி பொறுக்கப் போய்
சந்தோஷமாகிவிட்டேன், பல நாட்கள் அங்கே இருந்ததைப் போல

நேற்று மாலை அவளை
மறுபடி சந்திப்பேனா
நாளை பெய்த மழை நேற்றும் பெய்யுமா

வணிக வளாகத்தின் நீரூற்று நிற்கிறது
அசைவது நினைவு

நனைந்த உடைபோல்
நெருக்கமாயிருக்கிறேன் அவளோடு

நினைவில் நிலவின் கிரணத் துளி
பறவைகளின் வாயைக் கட்டிப்போட்டிருக்கிறது
சிள்வண்டு இசைக்கிறது

வானுக்கு வெளியே வழியும் நிலவுக் கதிர்
கடலை உப்பளமாக்கிவிட்டது

பண்டிகைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது சரவிளக்கு
தொலைபேசியின் பாட்டொலி குறுகுகிறது
என் ஆறுதல் ஏறிய வாகனம்
தென்கிழக்கில் நகர்ந்துபோகிறது

வருத்தத்தின் பல பாதைகளில் நிலா ஒளிர்கிறது
வெக்கையில் இருப்பது நான் மட்டுமல்ல

என் தனித்த தூக்கத்துக்குள்
மயில் நீட்டுகிறது
தன் களைத்த,
கண்கள் வைத்த தோகையை

மொட்டை மலையில்
காற்றின் இரைச்சலில்
இங்கே இல்லாதவள்
 இங்கே இருக்கிறாள்

பாட்டு வைத்தியர்


தேசியத்து முற்போக்கு
தேரடியில் நிக்குது
ஜோசியத்தை நம்பிக்கிட்டு
ஜோக்கராக மாறுது
சுட்டுவிரல் முடிவெடுக்கும்
சட்டசபைத் தேர்தலில்
கட்டைவிரல் ஜோசியமா
காப்பாத்தப் போகுது?