Tuesday, September 28, 2010

ஐயடிகள் காடவர்கோன் 2

முதல் பகுதி



அதில் ஒரு வார்த்தையும் புரியவில்லை. மறுபடி மனம் முழுக்க குழப்பம் சூழ்ந்தது. பொங்கு போதையும் தலை சுற்றலுமாகக் கிளம்பி வீட்டுக்குப் போய்விட்டேன்.

*

காலையானால் எஃப்எம் வைத்துவிடுகிறாள் நிர்மலா. ரேடியோவை அணைத்தால் அவள் சமையலில் நிதானம் தவறி மளிகைப் பட்டியலில் உப்புச் செலவு ஜாஸ்தியாகிவிடும் என்பதால் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை நான். ''சாயந்திரம் வரும்போது ---- வாங்கிட்டு வாங்க'' என்று நிர்மலா சொல்வதையும்.

மனுஷன் பரபரப்பாகக் கிளம்பிக்கொண்டு இருக்கும்போது, ''நான் ஒரு கவிதை சொல்றேன், மேகம் வடிக்கும் உப்பிள்ளாத கன்னீர்தான் மளை. எப்பிடி இருக்கு?''

''ஹைய்யோ, ஸூப்பர்பா ஸொன்னீங்க. இது நீங்கலே எலுதினதா... இதோ உங்க பாட்டு'' என்பதில் எரிச்சலடைந்து ரேடியோவை அணைத்தேன். நாம் சொல்வதைக் கேட்பதற்காக ரேடியோ கிடையாது.

அது ஸ்டேஷன் மாறி ரெயின்பே எஃப்எம்முக்குப் போனது. ''காடவர்கோன் என்பது சரியான விடை. கஷ்டமான கேள்விக்கு ரொம்பச் சரியா பதில் சொல்லிட்டீங்க. பாராட்டுக்கள்'' என்று தொகுப்பாளர் பரபரப்பான குரலில் கத்தியதும் மாள, என திகைத்துப் போனேன்.


எப்படித்தான் ஆஃபீஸுக்கு போன் போட்டேனோ, எப்படித்தான் பெர்மிஷன் கேட்டேனோ...

அடுத்த முக்கால் மணி நேரத்தில் ரெயின்பே ரேடியோவில் இருந்தேன். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியின் தயாரிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்பதை செக்யூரிட்டிக்குப் புரிய வைக்க இருபது நிமிடம் பிடித்தது. தயாரிப்பாளரைப் பார்த்து, நான் கேட்பது ராணுவ ரகசியத்தை அல்ல, என்று உணர்த்தி அவரது திகிலைக் குறைக்கவேண்டி இருந்தது. எல்லா விவரங்களையும் தெளிவாக விசாரித்துத் தெரிந்துகொண்டார் தயாரிப்பாளர்,

''நேயர்களோட அட்ரஸ் எங்களுக்கு எப்படிங்க தெரியும்? அவங்க போன் போட்டுப் பேசுவாங்க. அவங்களுக்குப் பரிசா ஒரு பாட்டுப் போடுவோம்...''

''காலர் ஐ.டியில நம்பர் இருக்காதா..?''

அவர் சிரித்தார். ''ஒரு நாளைக்கு எத்தனை நேயர்கள் பேசுறாங்கன்னு லிஸ்ட் தரட்டுங்களா?'' என்றார்.

சோர்ந்து திரும்பியவன், திடீரென்று திரும்பி அவரை நோக்கி ஓடினேன்.

நாற்காலியில் இருந்து எழுந்துவிட்ட அவர், என்ன என்பதுபோல் பார்த்தார்.

''சார், அந்தப் பதிலுக்கான கேள்வி என்னன்னு சொல்லுங்க'' என்றேன். கண்டேன்... நல்வார்த்தை நற்றமிழில் நவிலுக நாயே! என் இதயத் துடிப்பின் சத்தம் அந்த அறையில் ஓடிக்கொண்டு இருந்த ஃபேனின் சத்தத்தைவிட அதிகமாக இருந்தது.

அவர் மேஜை மணியை அடித்தது, அட்டெண்டென்ட் வந்தது, இவர் வேறு யாரையோ அழைத்து வரச் சொன்னது, அவர் வந்தது எல்லாமே ஸ்லோ மோஷனில் ந ட ந் த து. எனக்கு மூளைக்குள்ளே நரம்பு துடித்தது.

''காடவர்களுக்குத் தலைமை தாங்கி, ராஜ்யத்தை விஸ்தரித்த தென்னிந்திய மன்னன் யார்?' இதுதான் சார் அந்தக் கேள்வி.''

அவரே அவசரமாக ''அது நான் எப்பவோ, எங்கேயோ படிச்ச தகவல் சார். ஞாபகத்திலிருந்து எழுதினேன், ஏதாவது தப்புங்களா..?''

அவர் கவலை அவருக்கு. சரியாகவும் இருக்கலாம்... எனக்கே தெரியவில்லையே. அடியேனின் அவஸ்தையை அறியாத அற்பர்கள்..!

பிதுக்கிக் குடிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டாய் வெளியே என்னையே வீசிக்கொண்டேன்.

ஆஃபீஸ் போகப் பிடிக்கவில்லை. முதன்முதலாக தலை வலிக்கிற உண்மையைச் சொல்லி லீவு போட்டேன். என் ராஜ நடை தொய்ந்திருந்தது. வண்டியை உதைத்து வீட்டுப்பக்கம் திருப்பினேன்.

வெறுமனே தூங்க முடியாது.... நிர்மலா, கோயம்பேட்டுக்குப் போயிருப்பாள் போலும். நல்லதாப் போச்சு. ஃப்ரிட்ஜில் வார இறுதிக்கான பீர் ரெண்டு பாட்டில் இருந்தது. வெயிலுக்கு இதமாக ஜில்லென்று நெஞ்சாங்கூட்டில் இறங்கியது. பாட்டில்களில் வெறும் தண்ணீரை ஊற்றி மூடியை வைத்து அழுத்திவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.

இந்த ஐயடிகள் காடவர்கோன் யார்? ஏன் என்னை இப்படித் துரத்துகிறான்? எனக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டு இருக்கிறதா? மூளையைப் பிறாண்டிக்கொண்டுதான் சாகப் போகிறேனா? என் பிராவிடென்ட் ஃபண்ட், இன்ஷ்யூரன்ஸை எல்லாம் நிர்மலா ஒழுங்காக வாங்கிவிடுவாளா?

நிர்மலா, எனக்கப்புறம் இன்னொரு கல்யாணம் செய்துகொள்வாயா? வேணாம் பிளீஸ். அவனாவது நிம்மதியாக வாழட்டுமே நிர்மலா...

நான் ஒருவேளை காடவர்கோனின் மறுபிறவியா? மண்ணாங்கட்டி! ஒரு பிறவியே பிரச்னையாக இருக்கிறது...

மனச் சுவரில் பலவிதமான சித்திரங்கள் சிதிலமாகத் தோன்றி மறைந்தபடி இருக்கின்றன.

அட! அதென்ன? நான் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு மன்னர் உடை பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு புலவர் எழுந்தார்.

''கொன்றையந் தார்சூடி கொடுங்களம் போராடி
கன்றிளம் காளையாய் கடும்பகை வேரோடு
கொன்றுஎம் துயர்தீர்க்க திசையெலாம் சூழ
வென்றவன் என்றுமே வாழ்க வாழ்க!'

அட, நமக்கு இவ்வளவு பெருமையா? ''யாரங்கே, புலவருக்கு ஒரு ஃபிப்டி ருபீஸ் பழைய நோட்டு கொடுங்கள்.'' ..

அடுத்து ஒரு புலவர் எழுந்தார். இவர் முந்தைய புலவரைவிட நன்றாகப் புகழ்வாரா?

''நாடாளல் மன்னர்க் கழகு. கவியெழுதி
ஏடாண்டால் மக்கள் எதுசெய்வர் - ஓடோடி
குடித்துவிட்டுப் பாட்டெழுதி கேவலப் பட்டபுகழ்
வடித்துவைப்பேன் வார்த்தை தொகுத்து.''

அடப்பாவி, அன்று பாரில் கேவலப் பட்டதைக் கிண்டல் செய்கிறானா? வாளை உருவிக்கொண்டு,. கட்டிலில் இருந்து மடேல் என்று கீழே விழுந்துவிட்டேன்.

மணியைப் பார்த்தேன். படுத்து அரை மணிகூட ஆகவில்லை. மண்டையின் குடைச்சல் தாங்காமல் கிறுகிறுத்தது தலை. முகம் கழுவிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை.

பார் இதைப் பார், பாரில் நிகருண்டோ இதற்கு?

பாரில் எழுதிய காகிதத்தைத் தேடி எடுத்துக்கொண்டேன். எப்படியாவது இதைத் துப்புத் துலக்காவிட்டால் வாழவே துப்பில்லை என்று அர்த்தம்.

ரெண்டு தெரு தள்ளி இருக்கும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர். அவரும் கதை எல்லாம் எழுதுவார். மூக்குப்பொடி வாங்க கைமாத்து அடிக்கடி கேட்பார். அதனால் அடிக்கடி சந்திப்பதில்லை. அவர் வீட்டுக்குப் போனேன்.

''இது பதினஞ்சு அல்லது பதிநாலாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தமிழ் மாதிரி இருக்கு''.

''இதுக்கு அர்த்தம்கூட இருக்குங்களா?''

''என்னிக்கு சாகப் போறோம்னு தெரியாது. நம்ம உடலைக் கழுகு கொத்தி சிதைக்கிறதுக்கு முன்னாடி படவா நீ சிவனைக் கும்பிடு'ன்றா மாதிரியான கருத்து...'' என்றார்.

இப்படி தத்துவார்த்தமான பாட்டை நான் எப்படி எழுதினேன்..? ஒருவேளை அந்த ஐயடிகள் காடவர்கோன் சாமியாராக இருப்பாரோ? என்ன கண்றாவி இது. எங்கிருந்தோ 'மனமே நீ ஈசன் நாமத்தை' என்று பழைய காலப் பாட்டு கேட்டது. இதிலும் நாமமா அதும் சிவபெருமானுக்கே நாமம் போடுறான்கள்...

அட, சங்கமேஸ்வரன்!

பழைய பொருட்களின் பிரியன். பழைய பாடல்கள், பழைய திரைப்படங்கள், பழைய கால நாணயங்கள் சேகரிப்பவன். அவன் சாப்பிடுவதே பழைய அழுகிய தக்காளிதான் .மயிலாப்பூர் சுடுகாட்டுப் பக்கத்தில் அபார்ட்மென்ட். ஒருமுறை ஹொன்னப்ப பாகவதரின் பாட்டுக்களை - 'காடுடைய சுடலைப் பொடி பூசி' - கேட்கச் சொல்லி வற்புறுத்தியதில் இருந்து அவனோடு தொடர்பு துண்டுபட்டுப் போயிற்று.

''மிக்ஸர் சாப்பிடுறியா?'' என்று தந்தான் சங்கமேஸ்வரன். சங்ககால மிக்ஸரா? இன்னும் என்னென்ன புராதன வஸ்துக்கள் வைத்திருக்கிறானோ...

நான் சொன்ன எல்லா விவரங்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

''முன்னால காஞ்சிபுரம் பக்கத்துல காடவர் இன மக்கள் இருந்தாங்கன்னு எதிலேயோ படிச்ச ஞாபகம் இருக்கு'' என்று தாடையைச் சொறிந்தான்.

நமக்குத் தெரிஞ்ச காஞ்சி ஆசான்கள் போலிஸ் ஸ்டேஷன்வரை மார்னிங் வாக் போய்வருகிறார்கள்!

என் நாடித்துடிப்பு எகிற ஆரம்பித்தது. ''ஒரு நிமிஷம்'' என்று சொல்லிவிட்டு யார் யாருக்கோ போன் போட்டான்.

ரொம்ப நல்லவனாக இருக்கிறான். ஹொன்னப்ப பாகவதர் பாட்டைக் கேட்டே இருந்திருக்கலாம்.

''பிடிச்சிட்டேன் நண்பா'' என்று உற்சாகமாகச் சொன்னான் சங்கமேஸ்வரன். அவனுக்குத் தெரிந்த ஒருவர் அந்த மன்னனைப் பற்றிப் படித்திருக்கிறாராம்.

''அவருக்கு உடம்பு முடியாததால அவர் வீட்டுக்கு நம்மளைக் கூப்பிடுறாரு.''

''உடனே விடுரா, ஜுட்!''

காற்றினும் கடுகி விரைகிறது மனப்புரவி, மனப்புரளி!

(நாளை)

8 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வழக்கமா பதிவுகளில் ஒரு சில வரிகள் பாராட்டும் படியாகவோ,
நமக்கு நெருக்கமாகவோ இருக்கும். இதென்னடா இது வரிக்கு வரி அட ! போட வைக்குது.

கார்க்கிபவா said...

அண்ணா

லேபிள் சிறுகதையா?

வ்ரூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பரிசல்காரன் said...

விறு விறு - சுறு சுறு...

Anonymous said...

செம செம...

kathir said...

eanaku aarai kuraiyathan puriyudhu

ரமேஷ் வைத்யா said...

செல்ல நாய்க்குட்டி அவர்களே..
நன்றி.

கார்க்கி,
அது சிறுகதைதான். நீளமாக இருப்பதால் பிரித்துப் போட்டிருக்கிறேன். ரஷ்யச் சிறுகதைகள் 180 பக்கம் கூட வரும்.

பரிசல்,
வசிஷ்டர் வா... சரி வேண்டாம்.

பாலாஜி,
நன்றி.

கதிர்,
வருகைக்கு நன்றி.
கதையில் வரும் பாட்டுக்கள் எல்லாம் அந்தந்தக் காலத்துத் தமிழில் முயற்சி செய்திருக்கிறேன். ஒருவன் வெவ்வேறு பிறவிகளில் ஒரே மாதிரி சாவதுதான் கதை!

ஆரா said...

அண்ணன் வணக்கம்...
உங்களோடு உரையாடுவது போலவே இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தைகளிலும் புதுமை கொப்பளித்து குதூகளிக்கிறது. அடுத்து என்ன என அடிமனசு மனப் புரவி மாங்கு மாங்கென குதிக்கிறது. காடவர்கோன்.... காவியத் தேன்!

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு உன் தமிழ்தான் போதை.