Thursday, December 18, 2008

எனக்கு வந்த கடிதம் 1

எனக்கு வந்த கடிதம் 1
சிலருக்கு மனசுக்கு இதம் கடற்கரைக் காற்று; சிலருக்குக் கவிதை; சிலருக்கு இசை; எனக்கு நீ.
உனக்கு எழுதும்போது என் இதயமே எழுந்துவந்து எழுதத் தொடங்குகிறது. சில பேருக்கு நான் பேனாவை மட்டும் எழ்தச் சொல்லிவிடுவது உண்டு.
நாம் காப்பாற்று முயற்சிக்கு முன்பே நமது கடிதப் போக்குவரத்துக்குக் கல்லறை எழுப்பப்பட்டுவிட்டது. நான் உன்னை என்னில் ஒன்றிவிட்ட சகோதரனாகத்தான் நினைக்கிறேன். நீ ஏன் என்னை ஒன்றுவிட்ட சகோதரனாகக்கூட நினைப்பதில்லை?
என்னை அதிகமாகப் புரிந்துகொண்டது என் தாயும் நீயும்தான் என்று நான் நினைக்க, என்னை விட்டுப் பிரிந்துபோகிறேன் என்கிற மாதிரி இருக்கிறது உன் மௌனம். டைப் இன்ஸ்டிட்யூட், நெரிசல் நேரப் போக்குவரத்து, கடலலை இவை எல்லாவற்றையும்விட உன் நிசப்தம்தான் எனக்குப் பேரிரைச்சலாகக் கேட்கிறது.
எந்த இதயத்தையும் பணிய வைக்க நான் இவ்வளவு தூரம் முயற்சித்ததில்லை. இவ்வளவு பழகியும் என்னால் உன் இதயத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா?
கடிதம் எழுதவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆனால், அதற்காகப் போராடியதில்லை. முதன்முதலாக ஒரு போராட்டம் உன்னுடன் மட்டும்தான்.
ஆனால், இப்படிப் போராடினால்தான் உன்னுடைய கடிதத்தைக் காணமுடியுமாயின் என் வாழ்க்கை முழுவதும் போராடச் சம்மதமே.
நீ கடிதம் எழுதாததற்குக் காரணங்கள் தேவையில்லை. ஏனென்றால், எத்தகைய செயலுக்கும் நம்மால் காரணம் கற்பிக்க முடியும்.
'எழுதினால் ஒரேயடியாக ஆறு பக்கம் எழுதுவது.இல்லையென்றால், பேசாமல் இருந்துவிடுவது" இது என்ன வழக்கம்?
ஒரு காதலன் தன் காதலி மேல் கொண்ட மயக்கம் மாதிரி, உன்னை நேசிக்கிறேன். அது உன் அறிவாற்றலினால் அல்ல என்பதை உணர்ந்துகொள்.என் மேல் உனக்கிருக்கும் பிரியத்தையும் உணர்ந்திருக்கிறேன்.ஆனால், அதை சோம்பல் மிஞ்சுவதைக் கண்டுதான் அஞ்சுகிறேன்.
ஹரிகுமார்
பி.கு. உன் முந்தைய கடிதத்தை இன்றுடன் 19 தடவை படித்திருக்கிறேன்.

12 comments:

Thamiz Priyan said...

கடிதம் நல்லா இருக்கு... ஆனா உங்களுக்கு வந்ததா இருந்தா அனுப்புநர் பெயர் வேற பாலினமா இருக்கனுமே.. ;))

பரிசல்காரன் said...

நிசப்தத்தைப் பற்றிய வரிகள் நூறுசதம் உண்மை. பிணக்கு ஏற்படும்போது, மனைவியிடம் இதை உணராத கணவர்கள் மிகக் குறைவு அல்லது இல்லை.

இதைவிட சுவாரஸ்யமான கடிதங்கள் என்னிடம் உண்டு. அது எனக்கு வந்ததல்ல.. அதுவும் உங்களுக்கு வந்ததுதான்!

பரிசல்காரன் said...

@ தமிழ்ப்பிரியன்

//ஆனா உங்களுக்கு வந்ததா இருந்தா அனுப்புநர் பெயர் வேற பாலினமா இருக்கனுமே.. //

நண்பா.. நட்பு ஒன்றைத்தான் இந்தப் பால்வேற்றுமைகள் அண்டாமல் இருக்கிறது!

ரமேஷ் வைத்யா said...

தமிழ் பிரியன்,
தேவதைகளின் கடிதங்கள் தயாராக இருக்கிறது. கடைசியாய் வீட்டுக்குள் சூழ்ந்த மழை நீரில் ஊறிப்போய்க் கிடக்கும் அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் நுட்பத்தோடு மீட்டு வருகிறேன்.

ரமேஷ் வைத்யா said...

பரிசல்,
அவை என்ன கடிதங்கள் (அல்லது யாரின்) என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
அப்புறம் நட்பில் பால் பேதமில்லை என்கிற உங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை. அப்படி நடப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

Poornima Saravana kumar said...

//'எழுதினால் ஒரேயடியாக ஆறு பக்கம் எழுதுவது.இல்லையென்றால், பேசாமல் இருந்துவிடுவது"//

நிஜம் தான்!!!

Poornima Saravana kumar said...

கடிதம் நல்லா இருந்தது. ஆமா நீங்க ஏன் ஒரு பதில் கடிதமும் போடலை உங்கள் நண்பருக்கு?

ரமேஷ் வைத்யா said...

பூர்ணிமா சரண்,
நான் எழுதிய கடிதங்களும் பதில்களும் (அந்தக் காலத்தில்) டாப் ஆக இருக்கும். ஆனால், நான் நகல் வைத்துக்கொள்ளவில்லை : (

கார்க்கிபவா said...

//அப்புறம் நட்பில் பால் பேதமில்லை என்கிற உங்கள் கருத்து எனக்கு உடன்பாடில்லை. அப்படி நடப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.//

கரெக்ட் தல..:))))

சாரி சின்னத் தல :(((

selventhiran said...

கனவுகள் விற்க வருகின்றேன்... காது மடல்கள் தருவாயா....

குசும்பன் said...

மிக்க நலம், உங்கள் கனிவான விசாரிப்புக்கு மிக்க நன்றி!

வால்பையன் said...

//உன் முந்தைய கடிதத்தை இன்றுடன் 19 தடவை படித்திருக்கிறேன்.//

உங்களுக்கு வந்த கடிதமே இப்படி இருக்கிறதென்றால், நீங்கள் எழுதிய கடிதம் எப்ப்டி இருக்குமென்று மேலுள்ள வரிகளே சாட்சி,

அவைகளும் எங்கள் பார்வைக்கு கிடைக்குமா?