எரிமலையின் சிகரத்தில்
பனி பெய்வதை
கடற்கரை ஓரம் நடக்கையில் பார்த்தேன்
எங்கள் வீட்டுப்பக்கம் புல்தரை இருக்கும்
அங்கே பவழமல்லி பொறுக்கப் போய்
சந்தோஷமாகிவிட்டேன், பல நாட்கள் அங்கே இருந்ததைப் போல
நேற்று மாலை அவளை
மறுபடி சந்திப்பேனா
நாளை பெய்த மழை நேற்றும் பெய்யுமா
வணிக வளாகத்தின் நீரூற்று நிற்கிறது
அசைவது நினைவு
நனைந்த உடைபோல்
நெருக்கமாயிருக்கிறேன் அவளோடு
நினைவில் நிலவின் கிரணத் துளி
பறவைகளின் வாயைக் கட்டிப்போட்டிருக்கிறது
சிள்வண்டு இசைக்கிறது
வானுக்கு வெளியே வழியும் நிலவுக் கதிர்
கடலை உப்பளமாக்கிவிட்டது
பண்டிகைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது சரவிளக்கு
தொலைபேசியின் பாட்டொலி குறுகுகிறது
என் ஆறுதல் ஏறிய வாகனம்
தென்கிழக்கில் நகர்ந்துபோகிறது
வருத்தத்தின் பல பாதைகளில் நிலா ஒளிர்கிறது
வெக்கையில் இருப்பது நான் மட்டுமல்ல
என் தனித்த தூக்கத்துக்குள்
மயில் நீட்டுகிறது
தன் களைத்த,
கண்கள் வைத்த தோகையை
மொட்டை மலையில்
காற்றின் இரைச்சலில்
இங்கே இல்லாதவள்
இங்கே இருக்கிறாள்
No comments:
Post a Comment